உடுமலை - மூணாறு சாலை புதுப்பிக்கும் திட்டம் கேரள அரசு ஆர்வம்; தமிழக அரசு அலட்சியம்
உடுமலை - மூணாறு சாலை புதுப்பிக்கும் திட்டம் கேரள அரசு ஆர்வம்; தமிழக அரசு அலட்சியம்
UPDATED : மார் 29, 2025 04:44 AM
ADDED : மார் 29, 2025 04:39 AM

உடுமலை: சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மூணாறு ரோட்டில், தமிழக எல்லை வரை சாலையை விரிவாக்கும் செய்யும் திட்டம், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது, இரு மாநில போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சின்னாறு, மறையூர் வழியாக மூணாறு செல்லும் ரோடு, இரு மாநில போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சின்னாறு, காந்தலுார், ரவிகுளம் தேசிய பூங்கா, மறையூர், துாவானம் அருவி என இந்த ரோட்டில், சுற்றுலா தலங்கள் அதிகளவு உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களுக்கு இடையே இந்த ரோடு செல்கிறது.
இந்த ரோட்டில், உடுமலையில் இருந்து, 28.80 கி.மீ., தொலைவில் தமிழக எல்லையான சின்னாறு அமைந்துள்ளது. அப்பகுதி வரை, ரோடு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.
சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்தும், தமிழக பகுதியில் ரோடு விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது.
மேலும், ரோட்டோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் விலகிச்செல்ல முடிவதில்லை; 18வது கி.மீ., ல், உள்ள 'எஸ்' வளைவிலும் வாகனங்கள் திணறியபடி செல்கின்றன.
இந்த வளைவு பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, இரு மாநில போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்படுகிறது.
எனவே, ரோட்டை முழுமையாக விரிவுபடுத்தவும், 'எஸ்' வளைவு பகுதியை மேம்படுத்தவும், கடந்த, 2015ல், நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பினர்.
ஆனால், வனத்துறை அனுமதி கிடைக்காததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்னர் அனுப்பிய கருத்துருக்கள் மீதும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது கேரள அரசு, மறையூரில் இருந்து சின்னாறு வரை, 16 கி.மீ., தொலைவுக்கு ரோட்டை முழுமையாக புதுப்பித்து வருகிறது. இதனால், சுற்றுலா சார்ந்த வர்த்தகம் அப்பகுதியில் மேம்படும் வாய்ப்புள்ளது.
ஆனால், தமிழக அரசு, அலட்சியமாக இருப்பதால், இரு மாநில வாகன ஓட்டுநர்களும் அதிருப்தியில் உள்ளனர். சுற்றுலா வர்த்தகமும் பாதிக்கப்படுகிறது.

