பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவிடம் குழப்பத்தை ஏற்படுத்திய கேரள அதிகாரிகள்: தமிழக உரிமையை முன்வைக்க முடியாமல் திணறல்
பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவிடம் குழப்பத்தை ஏற்படுத்திய கேரள அதிகாரிகள்: தமிழக உரிமையை முன்வைக்க முடியாமல் திணறல்
ADDED : மார் 24, 2025 03:36 AM

இடுக்கி : முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய கண்காணிப்பு குழுவிடம் தமிழக தரப்பு உரிமையை முன்வைக்க விடாமல், கேரள அதிகாரிகள் குழப்பத்தை ஏற்படுத்தினர். இது, தமிழக விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லை பெரியாறு அணை தொடர்பாக, தமிழகம் -- கேரளா இடையே நீண்ட நாட்களாக பிரச்னை உள்ளது.
அதிருப்தி
இந்த அணையின் பாதுகாப்பு இதுவரை மத்திய நீர்வள ஆணையத்திடம் இருந்த நிலையில், தற்போது தேசிய அணைகள் பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் ஏழு பேர் அடங்கிய புதிய கண்காணிப்பு குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு, நேற்று முன்தினம் ஆய்வு நடத்தியது.
தமிழக நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் அணை உள்ளதால் வழக்கமாக இதுபோன்ற கண்காணிப்பு குழுக்கள் ஆய்வுசெய்ய செல்லும் போது, தமிழக தரப்பு அதிகாரிகள் அதிகமாக பங்கேற்பர்.
மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே கேரள அதிகாரிகள் கலந்து கொள்வர். ஆனால் நேற்று முன்தினம் தமிழக தரப்பில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் இதுவரை இல்லாத வகையில் கேரள தரப்பில் கேரள வனத்துறை படகு, போலீஸ் படகு, நீர்வளத் துறை படகுகளில் 60க்கும் மேற்பட்டோர் சென்றனர்.
அணைப் பகுதியில் ஆய்வு செய்யும்போது தமிழக தரப்பு அதிகாரிகள் அணையின் கள நிலவரம், உறுதித்தன்மை குறித்த விளக்கங்களை எடுத்துக் கூற விடாமல், கேரள அதிகாரிகள் தேவையற்ற பல கோரிக்கைகளை குழுவிடம் முன்வைத்து குழப்பத்தை ஏற்படுத்தினர்.
இது, தமிழக அதிகாரிகளை முகம் சுளிக்க வைத்தது. தொடர்ந்து மதியம் தேக்கடி ராஜிவ் காந்தி அறிவியல் மையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கேரள அதிகாரிகள் நடந்து கொண்டனர். இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டிக்கத்தக்கது
இதுகுறித்து பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது: பேபி அணையை பலப்படுத்துவதற்கு தடையாக உள்ள மரங்களை வெட்டுவதற்கு, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் தமிழக நீர்வளத்துறை மீண்டும் மனு வழங்க வேண்டும் என, கேரள தரப்பு அதிகாரிகள் முன்வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாது.
அணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அறிக்கையை மார்ச் 26ல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய கண்காணிப்பு குழு சமர்ப்பிக்கும் போது, தமிழக நீர்வளத் துறைக்கு எதிராகவோ, உண்மைத்தன்மைக்கு எதிராகவோ கருத்துகள் இருந்தால், தமிழகப் பகுதியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து வழித்தடங்களையும் மறித்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.