மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்: மத்திய அரசு மீண்டும் நிராகரிப்பு
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்: மத்திய அரசு மீண்டும் நிராகரிப்பு
ADDED : ஜூலை 27, 2026 05:20 AM

சென்னை: தமிழகத்தில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை, மத்திய அரசு மீண்டும் நிராகரித்து உள்ளது.
சென்னையை தொடர்ந்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கோவையில், 39 கி.மீ. தொலைவுக்கு, அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரை; உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை; உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது.
மதுரையில், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ., தொலைவுக்கு, மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதில், 27 கி.மீ. உயர்மட்ட பாதையில், 23 மெட்ரோ ரயில் நிலையங்கள், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில், மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க முடிவானது.
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மாநில அரசிடம் ஏற்கனவே வழங்கியது.
மதுரையில் 11,360 கோடி ரூபாயிலும், கோவையில் 10,740 கோடி ரூபாயிலும் திட்டங்களை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, மத்திய அரசிடம் மாநில அரசு வழங்கியது.
மக்கள் தொகையை காரணம் காட்டி, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை, மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் திருப்பி அனுப்பியது.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க, குறைந்தது, 20 லட்சம் மக்கள்தொகை தேவை; கோவை மற்றும் மதுரையில், 15 லட்சம் மக்கள் மட்டுமே வசிப்பதால் அனுமதி அளிக்க முடியாது என்று கூறியிருந்தது.
முடிவை மறுபரிசீலனை செய்யும்படி, பிரதமருக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். திட்ட அறிக்கையில் திருத்தம் செய்து, கடந்த மே மாதம் மீண்டும், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை, மத்திய அரசு மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.
'மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு, மதுரை, கோவையில் மக்கள் தொகை இல்லை. இந்த நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால், பயண நேரம் குறைய வாய்ப்பில்லை.
'மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பதிலாக,பஸ்களுக்கு மட்டும் பிரத்யேக வழி அமைத்து, அதில் பஸ்களை மட்டுமே இயக்கும், பி.ஆர்.டி.எஸ்., என்ற 'பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை' மேம்படுத்தலாம்' என, மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இரண்டாவது முறையாக, இந்த திட்ட அறிக்கையை, மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு, தமிழக அரசியல் கட்சியனர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
