இந்திய பொருளாதார புரட்சியின் 'கிங்' மன்மோகன் சிங்
இந்திய பொருளாதார புரட்சியின் 'கிங்' மன்மோகன் சிங்
UPDATED : டிச 27, 2024 07:48 AM
ADDED : டிச 27, 2024 06:56 AM

இந்திய பொருளாதார புரட்சிக்கு வித்திட்டவர் மன்மோகன் சிங். இரண்டு முறை பிரதமராக இருந்த இவர், 'அமைதி புயலாக' பல பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

மத்திய நிதியமைச்சர், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பல பதவிகளை வகித்த இவருக்கு 2004ல் பிரதமர் பதவி தேடி வந்தது. 2004 - 2014 வரை காங்., தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில், பத்தாண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.
சீக்கிய மதத்தை சேர்ந்த, முதல் பிரதமர். நேருவுக்கு பின் ஐந்தாண்டுகள் முழுமையாக பதவி வகித்து, இரண்டாவது முறையாக பிரதமரானவர். ராஜ்யசபா எம்.பி., மூலம் பிரதமரானவர் என பல சிறப்புகளை பெற்றவர். நீண்டகால பிரதமர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். பல உயரிய பதவிகளை வகித்தாலும் வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்தார்.
வாழ்க்கை பயணம்:
* 1932 செப்., 26: தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபின் காஹ் பகுதியில் பிறந்தார்.
* 1947: இந்தியா - பாக்., பிரிவினையின் போது இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கு இடம்பெயர்ந்தார்.
* 1957 - 1959 : பஞ்சாப் பல்கலையில் பேராசிரியர் பணி.
* 1958 : குர்ஷரன் கவுரை திருமணம் செய்தார்; மூன்று மகள்கள் உள்ளனர்
* 1966 - -1969 வரை ஐ.நா., வர்த்தகம், வளர்ச்சி கழகத்தில் பணியாற்றினார்
* 1969 - 1971 : டில்லி பல்கலை பேராசிரியராக பணி
* 1972 - 1976: நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர்
* 1982 - - 1985 : இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர்
* 1985: இந்திய பொருளாதார கூட்டமைப்பின் தலைவர்
* 1985 - 1987 : இந்திய திட்டக்கமிஷன் துணை தலைவர்
* 1990 - 1991 : பிரதமரின் பொருளாதார ஆலோசகர்
* 1991: யு.ஜி.சி., தலைவர்
* 1991: அசாமில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு
* 1995: ராஜ்யசபாவுக்கு தேர்வு
* 1991 - 1996 : நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மத்திய நிதியமைச்சர்
* 2001 : ராஜ்யசபாவுக்கு தேர்வு
* 1998 - - 2004 : வாஜ்யபாய் ஆட்சியின் போது ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்
* 2004 - 2014 : நாட்டின் 13வது பிரதமராக 10 ஆண்டுகள் பதவி வகித்தார்
* 2024 ஏப்., 3: ராஜ்யசபா பதவிக்காலம் நிறைவு; அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

விளக்கின் ஒளியில்...
* சிறு வயதிலேயே தன் தாயை இழந்தார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார்.
* இவர் வசித்த கேஹ் கிராமத்தில், 12 ஆண்டுகள் மின்சாரமே இல்லை, பள்ளியும் இல்லை. நீண்ட துாரத்தில் இருந்த பள்ளிக்கு நடந்த சென்று தான் படித்தார். மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் படிப்பதையே வழக்கமாக்கினார்.
* பொதுவாழ்க்கையில் அமைதியாக இருக்கும் இவர், மாணவப்பருவத்திலேயும் அமைதியானவராகவே விளங்கினார். பி.பி.சி.,க்கு அளித்த பேட்டியில், ' லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் படிக்கும் போது தனிமை, என் நீண்ட முடியை கையாள்வதற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து முடிப்பேன்' என தெரிவித்தார்.
* மன்மோகன் சிங்கிற்கு ஹிந்தி பேச தெரியும்; ஆனால் வாசிக்க தெரியாது. உருது மொழி நன்றாக தெரியும். பிரதமராக இருக்கும் போது, இவரது உரை உருதுவில் எழுதப்பட்டிருக்கும்.
* 1962ல் முன்னாள் பிரதமர் நேரு, அமைச்சரவையில் இடம்பெற விடுத்த அழைப்பை தன் பேராசிரியர் பணி காரணமாக நிராகரித்தார்.
* லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டதில்லை. 1999 டில்லி தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி. பின் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.
* தினமும் அதிகாலையில் பி.பி.சி., செய்தியை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதனால் தான் 2004ல் சுனாமி ஏற்பட்ட நிகழ்வை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கும் முன்பே தெரிந்து, அதற்கான மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினார்.
* இவர் எழுதிய பொருளாதார கட்டுரைகள், பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன.
* இவரது பிரதமர் பதவிகாலத்தை அடிப்படையாக வைத்து, 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற படம் 2019ல் வெளியானது.

துளிகள்...
* இவரது ஆட்சியில் 2006 - 2007ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி., ) 10.08 சதவீதத்தை எட்டியது. இதுவே இந்தியாவின் அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி.
* சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005 என்பதை கொண்டு வந்தார்.
* கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக 100 நாள் வேலை திட்டத்தை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம்) கொண்டு வந்தார்.
* இந்தியா - அமெரிக்கா அணு ஆயுத சட்டம் நிறைவேற்றப்பட்டது.
* தகவல் அறியும் உரிமைச்சட்டம்
* அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி

