தி.மு.க.,வுடன் உடன்படவில்லை என்கிறார் மா.கம்யூ., சண்முகம்
தி.மு.க.,வுடன் உடன்படவில்லை என்கிறார் மா.கம்யூ., சண்முகம்
UPDATED : பிப் 22, 2026 07:44 PM
ADDED : பிப் 21, 2026 05:11 AM

கோவை: போராடுவோர் மீது போலீசார் வாயிலாக, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக, மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த மா.கம்யூ., கூட்டத்தில், அவர் பேசியதாவது: தி.மு.க.,வோடு உடன்பட முடியாத பல்வேறு விஷயங்கள் எங்களுக்கு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு தொகையை உயர்த்தக்கோரி, போராடியவர்கள் மீது போலீசாரின் நடவடிக்கையை, நாங்கள் கடுகளவும் ஏற்கவில்லை. இதற்கு காரணமான, காவல்துறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராடுபவர்கள் மீது, தற்போது சென்னை போலீசார், புதுவித நடவடிக்கை மேற்கொள்கின்றனர். கைது செய்து, மண்டபத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ கொண்டு செல்லாமல், வேனில் அமர வைத்து, நாள் முழுதும் சென்னையை சுற்றி வருகின்றனர்.
இயற்கை உபாதை கழிக்க, உணவு உண்ண, தண்ணீர் குடிக்க அனுமதிக்காமல், மாலை, 6:00 மணிக்கு ஏதாவது ஒரு இடத்தில் இறக்கி விட்டு விடுகின்றனர். இதை கண்டிக்க வேண்டிய தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் மவுனமாக இருப்பது சரியா?
போராடும் உரிமையை, அரசியல் சாசனம் அளித்திருக்கிறது. போராடுபவர்கள், கண்ணியமாக நடத்தப்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதை மீறி, காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டால், மா. கம்யூ., கண்டன குரல் எழுப்பும். இவ்வாறு அவர் பேசினார்.

