தி.மு.க., அரசு 'ஆல் பெயில்': நயினார் நாகேந்திரன் விமர்சனம்
தி.மு.க., அரசு 'ஆல் பெயில்': நயினார் நாகேந்திரன் விமர்சனம்
UPDATED : பிப் 22, 2026 07:44 PM
ADDED : பிப் 21, 2026 05:06 AM

சென்னை: ''தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில் எதை செய்திருக்கின்றனர், எதை எல்லாம் செய்யவில்லை என, பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஒரு மதிப்பெண் போடப்பட்டது.
''அதில், தி.மு.க., அரசு, 'பெயில்' ஆகி இருக்கிறது. 'ஆல் பெயில்' கிட்டத்தட்ட, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், எதிர்காலத் திட்டங்கள் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் திரும்ப ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இல்லாததால், ஏற்கனவே ஐந்து ஆண்டுகளில் எதை சொன்னார்களோ, அதையே சொல்லி, அரைத்த மாவையே அரைத்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் ஒரு இடத்தில் பேசும்போது, 'நாங்கள், 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்' என சொல்லி இருக்கிறார். இன்னொரு இடத்தில் பேசும்போது, '90 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம்' எனக் கூறியுள்ளார்.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசும்போது, '75 முதல் 80 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம்' எனக் கூறியுள்ளார். தி.மு.க.,வில் இருக்கும் ஒவ்வொரு நபரின் தகவலும், முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றன.
எனவே, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை முழு தொகுப்பாக எடுத்து, எதை செய்திருக்கின்றனர், எதை எல்லாம் செய்யவில்லை என, பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதிப்பெண் போட்டு பார்த்தோம்.
அதில், இந்த அரசு, 'பெயில்' ஆகி இருக்கிறது. 'ஆல் பெயில்'. கிட்டத்தட்ட, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக மகளிர் உரிமைத்தொகை உட்பட, பல வாக்குறுதிகளை அளித்தனர்; அவற்றை நிறைவேற்றவில்லை.
சட்டசபையை விளம்பரப் பலகையாக பயன்படுத்தி உள்ளனர். அரசு நிர்வாகத்தை தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

