தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகள்: அ.தி.மு.க., - பா.ஜ., இடையே இழுபறி
தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகள்: அ.தி.மு.க., - பா.ஜ., இடையே இழுபறி
ADDED : ஜன 30, 2026 04:31 AM

தென் மாவட்டங்களில், அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில், அ.தி.மு.க., - பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும் உறுதியாக இருப்பதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க., 'டிபாசிட்' இழந்தது; மதுரையில் மூன்றாம் இடத்துக்கு சென்றது. தென் மாவட்டங்களில் பா.ஜ., வளர்ந்து வருவதே, இதற்கு காரணம்.
முக்குலத்தோர், நாடார், தேவேந்திர குல வேளாளர் ஆகிய சமூகத்தினர் பா.ஜ., பக்கம் வந்து விட்டனர். அவர்களை தக்கவைத்து, வரும் 2029 லோக்சபா தேர்தலில் பெரிய வெற்றி பெற, பா.ஜ., டில்லி மேலிடம் திட்டமிடுகிறது. அதற்காக, சட்டசபை தேர்தலில், அப்பகுதிகளில் அதிக தொகுதிகளில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளது.
எனவே தான், மதுரை தெற்கு, சாத்துார், ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார், மானாமதுரை, வாசுதேவநல்லுார், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, நாங்குநேரி, ராதாபுரம், நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 15 தொகுதிகளை, பா.ஜ., தேர்வு செய்து, போட்டியிட வசதியாக, தங்களுக்கு அந்த தொகுதிகளை வழங்க வேண்டும் என அ.தி.மு.க., தலைமையிடம் வலியுறுத்தி வருகிறது.
இதில், '12 தொகுதிகளை கட்டாயம் பெற வேண்டும்' என்பதில் பா.ஜ., மேலிடம் மிக உறுதியாக இருக்கிறது. அதற்கேற்ப, மத்திய மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில், பெரிய எண்ணிக்கையில் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டாம் என, கூட்டணி தலைமையிடம் பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
பா.ஜ.,வின் இம்முடிவுக்கு, அ.தி.மு.க., உடன்பட மறுக்கிறது. அக்கட்சியும், தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.
இது தொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியதாவது: கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 25 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம். அதற்கேற்ப, தமிழகம் முழுதும் பரவலாக தொகுதிகளை ஒதுக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.
ஆனால், தங்களுக்கு ஒதுக்குவதில், 50 சதவீதத்துக்கு மேல், தென் மாவட்ட தொகுதிகளாக இருக்க வேண்டும் என பா.ஜ., அடம் பிடிக்கிறது. இது போக, அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளும், கூட்டணி தலைமையிடம் இருந்து, தென் மாவட்டங்களில் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. ஏற்கனவே, தெற்கில் அ.தி.மு.க., சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், அங்கு குறைவான தொகுதிகளில் போட்டியிட்டால், அதுவே கட்சியை அழித்து விடும். தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, இழந்த செல்வாக்கை மீட்க, பழனிசாமி திட்டமிடுகிறார். ஆனால், பா.ஜ., விடாப்பிடியாக இருப்பதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

