திருப்பூர் அருகே முருகன் கோவில் இடிப்பு; ஹிந்து முன்னணியினர் கைது
திருப்பூர் அருகே முருகன் கோவில் இடிப்பு; ஹிந்து முன்னணியினர் கைது
UPDATED : ஜன 08, 2026 02:56 PM
ADDED : ஜன 08, 2026 04:44 AM

திருப்பூர்: திருப்பூர் அருகே முருகன் கோவில் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வருவாய்துறையினர் இடித்தனர். இதற்கான கோர்ட் உத்தரவு நகலை கேட்டு திரண்ட ஹிந்து முன்னணியினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மக்களுக்கு ஆறுதல் கூற சென்ற மாநில தலைவரை, போலீசார் வாயிலாக தாக்கப்பட்டதாக கூறி, மறியலில் ஈடுபட்ட, 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரில், 2.80 ஏக்கர் நத்தம் புறம்போக்கு இடம் உள்ளது. அதில், 80 சென்ட் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வழங்கிய நிலையில், மீதமுள்ள, 2 ஏக்கர், 1994ல் 122 பேருக்கு இலவச பட்டாவாக அரசு வழங்கியது.
ஆனால், யாரும் செல்லாமல் இருந்தனர். இதனால், 2024ல், பயன்படுத்தப்படாத இடத்தை இலங்கை தமிழர்களுக்கு வழங்க அளவீடு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
ஏற்கனவே, சம்பந்தப்பட்ட இடத்தில், நுாறாண்டு பழமையான குமரன் குன்றில், முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது. இதனை சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருவதால், பட்டா வழங்கக்கூடாது என்று, ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
முருகன் கோவில் இடிப்பு
வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள கோவிலை அகற்ற வேண்டும் என, நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், நேற்று காலை அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் தலைமையில், ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில் டி.எஸ்.பி.,கள் வெற்றிவேந்தன், சிவகுமார் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் காயம்
வருவாய்துறையின் கோவில் இடிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஹிந்து முன்னணியினர், கிராம மக்கள் என, 200 பேர் திரண்டனர்.
கோவில் இடிப்பதற்கான கோர்ட் உத்தரவை கேட்ட போது, இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, ஹிந்து முன்னணியினரை போலீசார் கைது செய்ய முயன்ற போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நடவடிக்கையில், காடேஸ்வரா சுப்ரமணியம் கீழே விழுந்தார். கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
180 பேர் கைது போலீசாரின் நடவடிக்கையை கண்டித்த ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் உட்பட, 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கோவில் இடிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
மாநில தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பு நிர்வாகிகள், பா.ஜ.,வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரை கண்டித்து, திருப்பூரில், புதுார் பிரிவு, ஊத்துக்குளி ரோடு, புஷ்பா ரவுண்டானா, காந்தி நகர், புதிய பஸ் ஸ்டாண்ட் என, பல இடங்களில் ஹிந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர். அதில், 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

