தொகுதிக்கு ரூ.5 லட்சம் இலக்கு நிதி திரட்டுகிறது நாம் தமிழர் கட்சி
தொகுதிக்கு ரூ.5 லட்சம் இலக்கு நிதி திரட்டுகிறது நாம் தமிழர் கட்சி
ADDED : மார் 15, 2026 04:33 AM

திருப்பூர்: சட்டசபை தேர்தல் செலவுக்காக, தொகுதிக்கு தலா 5 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயித்து, இணையதளம் வாயிலாக நாம் தமிழர் கட்சி நன்கொடை திரட்டுகிறது.
வரும் சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும், தேர்தல் செலவுக்காக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடத்திலும் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், மக்களுக்கு தற்போதே பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர், தங்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் வாயிலாக, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயித்து நிதி திரட்டுகின்றனர்.
குறைந்தபட்சம், 100 ரூபாய் முதல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாகவே பணம் செலுத்தவும், செலுத்திய தொகைக்கு ரசீதை, 'ஆன்லைன்' வாயிலாக பெறும் வகையிலும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஆங்காங்கே நடக்கும் கட்சி மாநாடு, பொதுக்கூட்டம் ஆகியவற்றிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக நிதி திரட்டுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, தினசரி வசூலாகும் தொகையை, கட்சியின் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

