ஆதவ் அர்ஜூனா பேச்சால் ரஜினி ரசிகர்கள் கொதிப்பு: த.வெ.க., வேட்பாளர்களுக்கு சிக்கல்
ஆதவ் அர்ஜூனா பேச்சால் ரஜினி ரசிகர்கள் கொதிப்பு: த.வெ.க., வேட்பாளர்களுக்கு சிக்கல்
ADDED : மார் 15, 2026 04:22 AM

மதுரை: நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்காதது ஏன் என்பது குறித்து த.வெ.க., தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியது ரஜினி ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது. தேர்தல் களத்தில் த.வெ.க., வேட்பாளர்களுக்கு பாடம் புகட்டுவோம் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு மதுரையில் போஸ்டர்கள் ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருநாட்களுக்கு முன் நடந்த த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, 'ரஜினி அரசியலுக்கு வந்த சமயத்தில் அவரை மிரட்டி தி.மு.க., வரவிடாமல் செய்துவிட்டது. இன்று ரெட்ஜெயண்ட் (துணை முதல்வர் உதயநிதி சினிமா நிறுவனம்) தயாரிப்பில் ரஜினி நடிக்க சென்றுவிட்டார்' என கிண்டலடித்தார்.
இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களில், 'காக்கா குஞ்சுகளுக்கும், கள்ளச்சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம் தலைவா. வேதனை, வெட்கம், அவமானம். காலம் பேசாது. நிச்சயம் பதில் சொல்லும். களத்தில் சந்திப்போம். கதம், கதம்' என குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்சி மாற்றத்திற்கு காரணமானவர் மதுரை ரசிகர்கள் கூறியதாவது: 1996லேயே அ.தி.மு.க., ஆட்சியை சுட்டிக்காட்டி 'இந்த ஆண்டவனால்கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது' எனக்கூறி ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்தவர் ரஜினி. அவர் நினைத்தால் அப்போதே கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்திருக்க முடியும்.
தொடர்ந்து படங்களில் 'கமிட்' ஆனது, ஆன்மிகத்தில் ஆர்வம் போன்ற காரணங்களால் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் அப்போதைக்கு யோசிக்கவில்லை. பிறகு கட்சி ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தபோது அவரது உடல்நிலை சரியில்லை. அதை வெளிப்படையாகவே சொல்லியவர் எங்கே, கரூரில் 41 பேர் இறந்தது தன்னால்தான் என்பது தெரிந்தும் திருச்சியில் பதுங்கிக்கொண்ட விஜய் எங்கே.
'கிளிப்பிள்ளை' விஜய் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து ரஜினியை 'பப்ளிசிட்டி'க்காக சீண்டிவருவது நல்லதல்ல. ஆதவ் அர்ஜூனாவை விஜய் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் விஜய் 'பொம்மை தலைவராகவும்', எழுதிக்கொடுத்ததை சொல்லும் 'கிளிப்பிள்ளையாகவும்' உள்ளார். இது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தேர்தல் களத்தில் த.வெ.க., வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.
கொடநாடும், விஜய்யும் சினிமா கலைஞர்கள் சார்பில் நடிகர் எஸ்.வி. சேகர் வெளியிட்ட வீடியோவில், 'ரஜினியும் சரி, அஜித்தும் சரி, கொடநாட்டில் குளிரில் கைகளை கட்டிக்கொண்டு கேட்டில் நின்று படத்தை 'ரீலிஸ்' செய்யுங்கள் என பிச்சைக்காரர் மாதிரி கேட்கவில்லை. அப்படிப்பட்ட ஒருவரை(விஜய்) வைத்துக்கொண்டு நீங்கள்(ஆதவ் அர்ஜூனா) அடுத்தவரை பற்றி பேசுகிறீர்களே' என தெரிவித்துள்ளார்.
தள்ளாடும் வெற்றிக்கழகம் தென் மண்டல ரஜினி மன்ற நிர்வாகியாக இருந்த பிரான்சிஸ் பாஸ்டின் கூறுகையில், ''தற்போதைய சூழலில் நம் சிஸ்டத்தையே மாற்ற வேண்டும் என ரஜினி கூறியிருந்தார். அப்போது நிலவிய சந்தர்ப்ப சூழ்நிலையால் அரசியலை தவிர்த்து விட்டார். இதையெல்லாம் மறந்து விட்டு ஆதவ்அர்ஜூனா தவறான தகவல்களை வெளியிட்டு திசை திருப்ப பார்க்கிறார்.
தமிழக வெற்றிக்கழகத்தை தள்ளாடும் வெற்றிக்கழகமாக மாற்ற பாடுபட்டு கொண்டுள்ள ஆதவ்அர்ஜூனா, இனி ரஜினி குறித்து தவறான தகவல்களை வெளியிட்டால் ரசிகர்கள் தக்கபதிலடி கொடுப்பர்'' என்றார்.

