தமிழகத்தில் கூடுதல் தொகுதிகள் பெற வேண்டும்: காங்., பொறுப்பாளரிடம் வலியுறுத்தல்
தமிழகத்தில் கூடுதல் தொகுதிகள் பெற வேண்டும்: காங்., பொறுப்பாளரிடம் வலியுறுத்தல்
ADDED : மார் 03, 2025 05:04 AM

சென்னை : “வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழக காங்கிரஸ் அதிகாரத்துடன் நெருங்கியிருக்கும்,” என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக, கோவா மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷ் சோடங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முதல் முறையாக, சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக காங்கிரசில், உட்கட்சி பூசல் நிலவும் நிலையில், கோஷ்டி தலைவர்களை, அவர் தனித்தனியாக சந்தித்து பேசினார். கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, திருநாவுக்கரசர், எம்.பி.,க்கள் விஷ்ணுபிரசாத், விஜய் வசந்த், முன்னாள் எம்.பி., விஸ்வநாதன், எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசியவர்கள், 'கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். கிராம கமிட்டி உறுப்பினர்கள் நியமனம், 100 சதவீதம் முழுமை பெற வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற 25 தொகுதிகளை விட, கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும்' என வலியுறுத்தினர். அதற்கு கிரிஷ் சோடங்கர் எந்த பதிலும் தெரிவிக்காமல், அமைதியாக கேட்டுக் கொண்டார்.