புது ரூட்டில் வருவாங்க உஷார்: கடத்தல் பற்றி எச்சரிக்கிறது சி.பி.ஐ.சி.,
புது ரூட்டில் வருவாங்க உஷார்: கடத்தல் பற்றி எச்சரிக்கிறது சி.பி.ஐ.சி.,
ADDED : அக் 23, 2024 04:41 AM

'சென்னை உட்பட, நாட்டில் உள்ள முக்கியமான விமான நிலையங்களில், புதுப்புது வழிகளில் கடத்தல்காரர்கள் வருவர். எனவே, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்' என, மத்திய அரசின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எச்சரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தங்கம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள், விமானத்தில் கடத்தி வரப்படுகின்றன. இவ்வாறு கொண்டு வரப்படும் கடத்தல் பொருட்களை, சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலானய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். தங்கம் மீதான சுங்க வரி குறைப்புக்கு பின், தங்கம் கடத்தல் கணிசமாக குறைந்தாலும், போதை பொருட்கள், 'இ - சிகரெட்' மற்றும் தடை செய்யப்பட்ட உபகரணங்கள் என, பல வழிகளில் கடத்தல் தொடர்கிறது.
இதை கருத்தில் வைத்து, டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் உள்ள, சுங்கத்துறை மற்றும் டி.ஆர்.ஐ., அதிகாரிகளுக்கு, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சுங்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடத்தல் சம்பவங்களை தடுக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்தினாலும், புதுப்புது வழிகளில் கடத்தல் தொடர்கிறது. வெளிநாடுகளுக்கு காரணமின்றி அடிக்கடி சென்று, திரும்பும் சிலரை கண்காணித்து பிடிப்போம். கடந்த 2023ம் ஆண்டில் இருந்து, குருவிகள் அதிகம் பேர், ஒரே விமானத்தில் வருவது, சற்று சவாலானதாக இருக்கிறது. இப்படி வருவோர் உடல்நல குறைவு ஏற்பட்டது போல நடித்து, சோதனையில் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம், திருச்சி விமான நிலையத்தில், 68 பயணியரிடம் இருந்து, 9.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கான, 'நெட்வொர்க்' ஒன்று தான். எனவே, ஒரே விமானத்தில் வெவ்வேறு வகையான பொருட்களை கடத்தி வருவது அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கை வந்துள்ளது.
சிலர் சுங்க சோதனையின் போது அலைக்கழிப்பதாக கூறி, சண்டை போடுவது போல நடித்து, வெளியே செல்ல முயற்சிப்பர். எனவே, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து, விமானத்தில் வரும் பயணியரை, தீவிரமாக கண்காணிக்கவும், சுங்க சோதனையை அதிகரிக்கவும் எச்சரிக்கைகள் வந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -