ஸ்ரீரங்கத்தில் ஈ.வெ.ரா., சிலை அகற்ற அடுத்தகட்ட போராட்டம்: பா.ஜ., திட்டம்
ஸ்ரீரங்கத்தில் ஈ.வெ.ரா., சிலை அகற்ற அடுத்தகட்ட போராட்டம்: பா.ஜ., திட்டம்
ADDED : அக் 09, 2024 04:58 AM

திரைப்பட சண்டை இயக்குனர் கனல் கண்ணனுக்கு எதிரான த.பெ.தி.க., வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அப்போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஈ.வெ.ரா., சிலையை அகற்ற வேண்டும் என, அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
'ஸ்ரீரங்கம் கோவில் வாசலில், கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் ஈ.வெ.ரா., சிலை உடைக்கப்படும் நாள்தான், ஹிந்துக்களின் எழுச்சி நாள்' என, ஹிந்து முன்னணி நிர்வாகியும், திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனருமான கனல் கண்ணன் பேசியது தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 'கோவில் அருகில் உள்ள ஈ.வெ.ரா., சிலை பீடத்தில், கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு எதிரான வாசகங்கள், ஆத்திரமூட்டும் விதமாக உள்ளன' எனக்கூறி, கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, கனல் கண்ணனின் வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறியதாவது:
ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில், ஸ்ரீரங்கம் கோவில் முன், ஈ.வெ.ரா., சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை அமைந்த பீடத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள், பக்தர்கள் மனதில் கோபமும், ஆத்திரமும் ஊட்டும் வகையில் இடம் பெற்றுள்ளன.
கடவுள் இல்லை எனக்கூறிய ஈ.வெ.ரா., சிலை, ஏன் மசூதி, சர்ச் முன் வைக்கப்படவில்லை. ஹிந்து கோவில் முன் மட்டும் எப்படி சிலை வைக்கலாம்? இது அராஜகத்தின் உச்சக்கட்ட செயல்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மன் கோவில் அருகில், ஈ.வெ.ரா., சிலை அமைந்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள வாசகமும் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, கோவில் முன் உள்ள சிலையை அகற்ற உயர் நீதிமன்றத்தை நாடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் கூறியதாவது:
ராமர் சிலையை செருப்பால் அடித்தார் ஈ.வெ.ராமசாமி. அத்தி வரதரை, 1 கோடி மக்கள் தரிசித்து, அந்த அடியை திருப்பிக் கொடுத்தனர். சுதந்திரம் பெற்ற நாள் கருப்பு நாள் என, ஈ.வெ.ரா., விமர்சித்தார். 'கடவுள் இல்லை, அவரை வணங்குபவன் காட்டுமிராண்டி' என்றார்.
இப்படி பேசிய ஒருவரின் சிலையை வைப்பதும், அவரது வாழ்க்கை வரலாறு, பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதும் மாணவர்களுக்கு தவறான வழிகாட்டுதலுக்கு முன்னுதாரணமாக உள்ளது.
ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலை, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது. சிலையையும், பீடத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்களை அகற்றவும், கனல் கண்ணன் வழக்கு உத்தரவை மேற்கோள் காட்டி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். சிலை அகற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் -