மொழி வெறிக்கு எதிர்ப்பு: வளர்ச்சி அரசியலால் சாதித்த பா.ஜ.,
மொழி வெறிக்கு எதிர்ப்பு: வளர்ச்சி அரசியலால் சாதித்த பா.ஜ.,
UPDATED : ஜன 17, 2026 05:24 AM
ADDED : ஜன 17, 2026 05:23 AM

மும்பை: மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., பெற்றுள்ள இந்த மகத்தான வெற்றி, மராத்திய அடையாளத்தில் இருந்து நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியை நோக்கிய அரசியலுக்கு மாறி இருக்கிறது.
''மும்பை மராத்திய மண்; மராத்தியர்களுக்கே மும்பை சொந்தம் என்ற மொழி ரீதியான பிளவுகளுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது,'' என பா.ஜ., தலைவர் நிதேஷ் ரானே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''மொழி ரீதியாக பிரிவினை பேசாமல், ஹிந்துக்களின் நலனை முன்வைத்து பேசுபவர்களே இனி மஹாராஷ்டிராவை ஆள முடியும்,'' என தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சொந்த ஊரான நாக்பூரிலும், பா.ஜ., வெற்றியை நோக்கி பயணித்துள்ளது. மொத்தம் உள்ள 151 வார்டு உறுப்பினர்களில், கடந்த 2017ல் பா.ஜ., 108 இடங்களை வென்றிருந்தது . தற்போது அந்த எண்ணிக்கையை கடந்து பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது.
இதில் ஆறுதலாக, லத்துார் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 70 வார்டு களில், 40 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது. அதே சமயம், அங்கு இரண்டாவது இடத்தை பா .ஜ., பிடித்தள்ளது.
மும்பை மாநகராட்சி தேர்தலுக்காக பிரிந்து இருந்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் கடந்த மாதம் ஒன்றாக கைகோர்த்தனர். வழக்கம் போல, இந்த முறையும், மராத்திய மொழியை முன்வைத்து அவர்கள் மாநகராட்சி தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தனர்.
ஆனால், மொழி உணர்வுகளை துாண்டும் அவர்களது பிரசாரம் எடுபடவில்லை. பெண்களை குறிவைத்து பா.ஜ., அறிவித்த வாக்குறுதிகள், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான வளர்ச்சித் திட்டங்கள் மஹாராஷ்டிரா அரசியலில் பா.ஜ., முத்திரை பதிக்க உதவி இருக்கிறது.
* பா.ஜ., முன்வைத்த ஹிந்துத்வா, வளர்ச்சி அரசியல், இளம் வாக்காளர்களை கவர்ந்தது. மொழி உணர்வை துாண்டும் அரசியலை விட, வளர்ச்சி, நல்லாட்சிக்கே இளம் வாக்காளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்
* இந்த தேர்தலில் தாக்கரே 'பிராண்ட்' சுத்தமாக எடுபடவில்லை. அரசியல் வியூகத்தை மாற்றி அமைப்பதற்கான நிர்ப்பந்தம் தாக்கரேவுக்கு ஏற்பட்டுள்ளது
* நகர்ப்புறங்களில் இதுவரை பிரகாசமாக இருந்த பவார் குடும்பத்தின் ஆதிக்கம் மங்க துவங்கி இருக்கிறது. வாரிசு அரசியலை மக்கள் புறக்கணித்ததே இதற்கு காரணம்
* மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் தனது நகர்புற வாக்குகளை இழப்பது தொடர்கதையாகி இருக்கிறது.
* எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததும் பா.ஜ.,வுக்கு இந்த தேர்தலில் பெரும் சாதகமானது
* மும்பையில் மாறி வரும் மக்கள் தொகையும், சிவசேனாவின் பாரம்பரிய அரசியல் கணக்குகளை தவிடு பொடியாக்கி வருகிறது
* வட இந்தியர்கள், மராட்டிய மொழி பேசாதவர்களின் ஓட்டுகளை பா.ஜ., அதிகமாக அறுவடை செய்தது
* 'மஹராஷ்டிரா; மராத்தியர்களுக்கே சொந்தம்' என்ற ராஜ் தாக்கரேவின் ஆக்ரோஷமான பேச்சு எடுபடவில்லை. குறிப்பாக இளம் வாக்காளர்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை
* பெண்கள் நலனை குறிவைத்து பா.ஜ., முன்வைத்த திட்டங்களே மீண்டும் ஒரு முறை வெற்றிக்கு வித்திட்டுள்ளது

