பழநி மடம் நில மோசடி வழக்கு: 1880 முதல் ஆவணங்களை சேகரித்த சி.பி.சி.ஐ.டி.,யினர்
பழநி மடம் நில மோசடி வழக்கு: 1880 முதல் ஆவணங்களை சேகரித்த சி.பி.சி.ஐ.டி.,யினர்
ADDED : ஜூலை 22, 2026 05:15 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலமோசடி தொடர்பாக கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி., போலீசார் 1880 முதல் பராமரிக்கப்படும் நில ஆவணங்களை சேகரித்துள்ளனர்.
பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமாக ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் மோசடியாக திருப்பூர் மாவட்டம் உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழநி டி.கே.என்.புதுாரைச் சேர்ந்த சேதுபதிக்கு ஜூலை 6 ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழநி அடிவாரம் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு டி.ஜி.பி., எஸ்.பி., பரிந்துரைபேரில் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ஜூலை 16ல் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,சஜிதா, டி.எஸ்.பி., அஜய்தங்கம் விசாரணையை துவக்கினர்.
பழநி பதிவுத்துறை அலுவலகம், மடத்துக்கு சொந்தமான நிலம், கோயில் நிர்வாக அலுவலகம், கண்காணிப்பு அலுவலகம், புகாருக்குள்ளான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, நில புரோக்கர், பத்திர எழுத்தர், பத்திரப்பதிவு நேரத்தில் உடன் இருந்தவர்கள், கோயில் தரப்பு, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக திண்டுக்கல், பழநி, விழுப்புரம், திருநெல்வேலி, திருப்பூர் மாவட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இவ்விவகாரத்தில் பதிவுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய கூடுதல் பதிவுத்துறை ஐ.ஜி., சுதா மால்யா, உதவி ஐ.ஜி.,க்கள் கண்ணன், பூங்கொடி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று முன்தினம் பழநி பதிவுத்துறை அலுவலகத்தில் விசாரணையை துவக்கினர். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் இக்குழுவினர் விசாரணை நடத்தினர்.
![]() |
இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி., சார்பில் பழநி கோயில் முன்னாள் இணை ஆணையரும் தற்போது கூடுதல் ஆணையராக பணிபுரியும் மாரிமுத்து உள்ளிட்டோருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி மாரிமுத்து, ஓய்வு தாசில்தார் மாரியப்பன், ஓய்வு வி.ஏ.ஓ., சின்னச்சாமி, அறநிலையத்துறை ஆய்வாளர் சிவநேசன் ஆகியோர் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் நேற்று காலை 10:30 மணிக்கு ஆஜராயினர். அவர்களிடம் எஸ்.பி., சஜிதா விசாரணை நடத்தினார்.
கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணையில் தண்டபாணி மடத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பாக 1880 முதல் பராமரிக்கப்படும் முக்கிய ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

