'எழுத்தைவிட வார்த்தையே முக்கியம் என்றார்' பழனிசாமி; 'பல்டி' குறித்து பிரேமலதா ஆதங்கம்
'எழுத்தைவிட வார்த்தையே முக்கியம் என்றார்' பழனிசாமி; 'பல்டி' குறித்து பிரேமலதா ஆதங்கம்
UPDATED : ஜூன் 12, 2025 03:50 AM
ADDED : ஜூன் 12, 2025 03:48 AM

சென்னை: ''எழுத்துப்பூர்வமாக சொல்வதைவிட, என் வார்த்தைதான் மிக மிக முக்கியம் என பழனிசாமி உறுதி கொடுத்தார். இப்போது ராஜ்யசபா, 'சீட்' அடுத்த ஆண்டு தருவதாகக் கூறி உள்ளார்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
சென்னை தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மண்டல அளவில் நேற்று துவங்கியது. இதில் பங்கேற்ற, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவக்கி உள்ளோம். தமிழகம் முழுதும், நானும், விஜயபிரபாகரனும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம்.
ஜனவரி 9ம் தேதி, கடலுாரில் மாநாடு நடத்தப்படும். அதன்பின், தேர்தல் பணிகள் வேகமாக நடக்கும். தமிழகத்தில் தனித்து தேர்தல் களத்தில் நிற்க முடியும் என்பதை நிரூபித்தவர் விஜயகாந்த். அவர் வழியில் இப்போதும் செல்ல தே.மு.தி.க., தயார்.
விஜயகாந்தை முன்னுதாரணமாக வைத்து சீமான் தனித்துப் போட்டியிடுகிறார். அந்த வழியில் விஜய் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
எங்கள் இறுதி நிலைப்பாடு என்ன என்பதை, இப்போது கூற முடியாது. தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வந்தால் வரவேற்போம் என செல்வப்பெருந்தகை, திருமாவளவன் கூறியதற்கு நன்றி. கூட்டணி குறித்து இந்த நிமிடமே அறிவிக்க முடியாது. அதற்கு காலம் இருக்கிறது. கடலுார் மாநாட்டில் எங்கள் முடிவை அறிவிப்போம்.
தே.மு.தி.க.,விற்கு 2026ம்ஆண்டு ராஜ்யசபா 'சீட்' தருவதாக அ.தி.மு.க., தரப்பில் கூறியுள்ளனர்; அதை வரவேற்கிறோம்.
லோக்சபா தேர்தல் நேரத்தில், ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதே, ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை.
அதை குறிப்பிடும்படி கூறியபோது, ஆண்டு குறிப்பிடுவது வழக்கத்தில் இல்லை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார். மேலும், எழுத்துப்பூர்வமாக சொல்வதைவிட, என் வார்த்தைதான் மிக மிக முக்கியம் என உறுதியும் கொடுத்தார்.
தேர்தல் ஒப்பந்தம் செய்தபோதே அதை வெளியிடுவோமா என, பழனிசாமியிடம் கேட்டதற்கு, இப்போது வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
அந்த ஒப்பந்த நகல் உள்ளது. அரசியல் நாகரிகம் கருதி, அதை வெளியிடவில்லை.
பழனிசாமி ராஜ்யசபா சீட் இல்லை எனக் கூறியதும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தொடர்பு கொண்டு, அதை பெரிதுபடுத்த வேண்டாம். பழனிசாமி டென்ஷனில் இருந்ததால், அப்படி கூறிவிட்டார் என்றனர். இப்போது ராஜ்யசபா சீட்டை, அடுத்த ஆண்டு தருவதாக பழனிசாமி கூறி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.