'என்னை நம்பி கெட்டவர் இல்லை' இப்தார் விழாவில் பழனிசாமி பேச்சு
'என்னை நம்பி கெட்டவர் இல்லை' இப்தார் விழாவில் பழனிசாமி பேச்சு
ADDED : மார் 22, 2025 03:44 AM

சென்னை: ''என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், நம்பி கெட்டவர் இன்று வரை யாரும் இல்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அ.தி.மு.க., சார்பில், சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:
வாழ்வின் இளமைக் காலம் முதல் இறுதி நாள் வரை, முஸ்லிம் நண்பர்கள் பலரை பெற்றிருந்தவர் எம்.ஜி.ஆர்., அந்த மகத்தான மனிதரால் ஈர்க்கப்பட்டு, அரசியலுக்கு வந்தவன் நான்.
அமைதி மார்க்கமான முஸ்லிம் மார்க்கத்தை தவறாக சித்தரித்து, முஸ்லிம்களின் நன்மதிப்பை குலைக்கும் வகையில் திரைப்பட காட்சிகள் வந்தபோதெல்லாம், உறுதிபட நின்று கடும் நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா.
அந்த இரு பெரும் தலைவர்களால் அரசியலில் உருவாக்கப்பட்டு, அவர்களின் வழியில் அரசியல் பயணம் செய்யும் நான், அவர்களைப் போலவே முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனாக, சகோதரனாக, பாதுகாவலனாக செயல்படுவேன்.
பதவிக்காகவோ, புகழுக்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை. எனக்கென்று தனிப்பட்ட கருத்தும், நிலைப்பாடும் கிடையாது. ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழனாக, இந்தியனாக, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று இயல்பாகவே வாழ்ந்து வருகிறேன்.
எல்லாருக்கும் சம நீதியும், சம பாதுகாப்பும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று மனதார நினைப்பவன் நான். எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினரை பாதுகாத்து, அரவணைத்து, அன்பு செய்வதை தலையாய கடமையாகக் கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான், முஸ்லிம்களுக்கு துணையாக இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
ஆண்டவரை துணையாக கொண்டவர்களை யாராலும் அழிக்க முடியாது. பொது வாழ்வில் அறமும், நேர்மையும் கொண்டு செயல்படுபவர்களுக்கு ஆண்டவன் துணை நிற்பார் என்பதற்கு நபிகள் நாயகம் வாழ்வே உதாரணம்.
மக்களின் பன்முகத் தன்மையை ஏற்றுக் கொண்டு செயல்படும் கட்சி அ.தி.மு.க., அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித்தன்மையை மதிக்கிறோம்; பாதுகாக்கிறோம்.
ஒரு கையில் உள்ள ஐந்து விரல்களும் ஒவ்வொரு விதம். அது தான் கைக்கு அழகு. அது தான் இறைவனின் படைப்பு. இதைத்தான் எங்கள் தலைவர்கள் எங்களுக்கு சுட்டிக்காட்டி சென்றிருக்கின்றனர்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முஸ்லிம்களுக்கு துணை நின்றது போல, நாங்களும் துணை நிற்போம். எம்.ஜி.ஆர்., சொன்னது போல, என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், நம்பி கெட்டவர் இன்று வரை யாரும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.