பசும்பொன் தேவருக்கு 'பாரத ரத்னா' விருது: பிரதமரிடம் பழனிசாமி பேசாததால் அதிருப்தி
பசும்பொன் தேவருக்கு 'பாரத ரத்னா' விருது: பிரதமரிடம் பழனிசாமி பேசாததால் அதிருப்தி
ADDED : மார் 03, 2026 05:39 AM

- நமது நிருபர் -
முத்துராமலிங்க தேவருக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்குமாறு, பிரதமரிடம் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வலியுறுத்தாததால், அக்கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இது தொடர்பாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தென் மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டது; வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக முக்குலத்தோர் சமூக மக்கள் திரும்பினர்.
இதை சரிசெய்ய, முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன், சீனிவாசன், உதயகுமார் உள்ளிட்டோருக்கு, மாநில அளவில் அ.தி.மு.க.,வில் பதவிகள் கொடுத்தார் பழனிசாமி; அந்த காய் நகர்த்தலால் எந்த மாற்றமும் நிகழவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் திண்டுக்கல்லில் பழனிசாமி பேசியபோது, 'முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்' என்று குரல் கொடுத்தார். தொடர்ந்து, தென் மாவட்டங்களில் நடந்த பொதுக் கூட்டங்களிலும், அதே கருத்தை கூறி வந்தார்.
இதனால், முக்குலத்தோர் மக்களிடையே, தன் மீதான வெறுப்பு தணிந்து விட்டதாக பழனிசாமி நம்பியிருந்தார். அதனால், அதுகுறித்து மேற்கொண்டு எந்த அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை.
தற்போது, சசிகலா தனிக்கட்சி துவங்க உள்ளதாலும், தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் ஐக்கியமானதாலும், பழனிசாமி மீது அந்த சமூதாய மக்களிடம் மீண்டும் வெறுப்பு எழுந்துள்ளது.
அதை சரி செய்ய, மதுரையில் நடந்த தே.ஜ., கூட்டணி கூட்டத்தில், பிரதமர் மோடியிடம், 'முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வைக்க, பழனிசாமியிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் பிரதமரிடம் பேசுவதாக சொல்லி இருந்தார்.
மேடையில், பழனிசாமிக்கு முன் பேசிய அன்புமணி, 'வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், 'தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை பழனிசாமி வலியுறுத்தவில்லை. இது, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் முக்குலத்தோர் இன மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு, தேர்தல் நெருக்கத்தில், மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில், தென் மாவட்டங்கள் நலனுக்காக, பிரதமரிடம் ஒரு கோரிக்கையை கூட பழனிசாமி வைக்கவில்லை. தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.,வுக்கும், தனக்கும் எதிராக நிலவும் அதிருப்தியை சரிசெய்ய பல வாய்ப்புகள் கிடைத்தும், பழனிசாமி கோட்டை விட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

