ADDED : மார் 03, 2026 05:49 AM

- நமது சிறப்பு நிருபர் -
தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சில் சுமுக முடிவு எட்டப்படாததால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.
இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் தொடருவதை, காங்., நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை. இதனால், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, த.வெ.க., தரப்பில் கடுமையாக முயற்சிகள் நடந்தன. ஆனால், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கனிமொழி ஆகியோர் தொடர்ச்சியாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை சந்தித்து பேசி வருவதால், கூட்டணி பேச்சை வெளிப்படையாக செய்ய முடியவில்லை.
தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தலைமையிலான குழு, தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து சமீபத்தில் பேசியது. அப்போது, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை தி.மு.க., சொன்னதால், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அதிருப்தியான காங்., மேலிடம், த.வெ.க.,வுடன் மீண்டும் பேச்சை துவங்கியுள்ளது.
அதன்படி, த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, பிப்., 28-ம் தேதி டில்லி சென்று, காங்., மூத்த தலைவர் சிலரை சந்தித்து பேசினார்; தொடர்ந்து, மார்ச் 1ம் தேதி ஹைதராபாத் சென்றார். ஆந்திராவில் இருந்து அங்கு வந்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரையும் ஹோட்டலில் சந்தித்து பேசினார். இதனால் தான், மார்ச் 1ம் தேதி நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், ஆதவ் பங்கேற்கவில்லை. அப்போது, வேணுகோபாலுக்கு போன் செய்த மாணிக்கம் தாகூர், அவருடன் ஆதவ் அர்ஜுனாவை பேச வைத்துள்ளார்.
'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, காங்.,கில் பலரும் ஆர்வமாக உள்ளனர். கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை பெற தலைமையும் விரும்புகிறது. ஆனால், 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் மூலமாக, ராகுலுக்கு தி.மு.க., நெருக்கடி கொடுக்கிறது. தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால், நிச்சயம் தலைமையும் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க பச்சைக்கொடி காட்டி விடும். எனவே, ஓரிரு நாட்கள் எங்களுக்காக காத்திருங்கள்' என வேணுகோபால் கூறியுள்ளார்.
இந்த தகவலை சென்னை திரும்பிய ஆதவ், விஜயிடம் கூறி உள்ளார். எனவே, இது குறித்து ஆலோசனை நடத்த, நீலாங்கரை வீட்டில் இருந்து, பட்டினப்பாக்கம் வீட்டுக்கு விஜய் நேற்று சென்றார். அங்கு விஜய், ஆதவ், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், காங்கிரசுக்காக ஓரிரு நாட்கள் காத்திருக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

