ரஜினி ஆதரவை பெற திட்டம்: தி.மு.க., - பா.ஜ., ரகசிய முயற்சி
ரஜினி ஆதரவை பெற திட்டம்: தி.மு.க., - பா.ஜ., ரகசிய முயற்சி
UPDATED : பிப் 23, 2026 02:28 PM
ADDED : பிப் 23, 2026 05:36 AM

சட்டசபை தேர்தலில், நடிகர் ரஜினியின் ஆதரவை பெற, தி.மு.க., - பா.ஜ., இரு தரப்பில் இருந்தும் முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ரஜினி, தன் அரசியல் பிரவேசத்துக்காக, ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றமாக, கடந்த 2018ல் மாற்றினார். அதன்படி, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
40 லட்சம் பேர்
அரசியலுக்கு ரஜினி வராவிட்டாலும், அவரது அமைப்பு இன்னமும் வலுவாக உள்ளது. அதில், 40 லட்சம் பேர் செயல்பாட்டில் உள்ளனர். இந்த ஓட்டுகளை தங்களுக்கு சாதகமாக்க, தி.மு.க., தரப்பில் முயற்சி நடைபெறுகிறது.
சமூக வலைதளங்களில், ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால், ரஜினி ரசிகர்கள், விஜய் மீது கோபத்தில் உள்ளனர். அதை தங்களுக்கு சாதகமாக்க, தி.மு.க., தரப்பு முயற்சிக்கிறது.
அதன்படி, தி.மு.க., மேலிட குடும்பத்தில் உள்ள முக்கியமான தயாரிப்பாளர் வழியாக, ரஜினியிடம் முதற்கட்ட பேச்சு நடந்துள்ளது. இதற்கிடையே, தி.மு.க., கூட்டணியில் உள்ள நடிகர் கமலும், ரஜினியும் பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து, ஒரு படம் நடிக்க உள்ளனர்.
அந்த படத்தை, முதல்வர் ஸ்டாலின் பேரன் இன்பநிதியின் நிறுவனம் தயாரிக்கிறது. அதற்கான பணிகளின்போதே, சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு குரல் கொடுக்க, ரஜினியிடம் பேசப்பட்டது.
அரசியல் ஆலோசகர்
அப்போது, 'கடந்த 1996 தேர்தலில், கருணாநிதிக்கு ஆதரவாக, ஜெயலலிதாவை விமர்சனம் செய்தீர்கள்; அதுபோல வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மன்ற நிர்வாகிகளிடம் தி.மு.க.,வுக்காக வேலை செய்யுமாறு சொல்லுங்கள்' என, ரஜினியிடம் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், ரஜினி, எந்த உத்தரவாதமும் இதுவரை அளிக்கவில்லை. அதேபோல், ஆன்மிகத்தில் ரஜினி நாட்டமாக உள்ளதால், பா.ஜ.,வும் அவரது ஆதரவை பெற முயற்சி செய்கிறது. ரஜினியின் அரசியல் ஆலோசகராக இருந்த அர்ஜுன மூர்த்தி தற்போது பா.ஜ.,வில் உள்ளார்.
அவர் மனது வைத்தால், ரஜினியை தங்கள் பக்கம் கொண்டு வந்து விடலாம் என, பா.ஜ., மேலிடம் நினைக்கிறது. அதன்படி, அர்ஜுன மூர்த்தி வழியாக, ரஜினியிடம் பேச ஏற்பாடு நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

