யார் அந்த சார் வழக்கில் 6 போலீஸ் போன் பறிப்பு; 'ஓசி' பிரியாணிக்கு நச்சரித்து சிக்கினர்
யார் அந்த சார் வழக்கில் 6 போலீஸ் போன் பறிப்பு; 'ஓசி' பிரியாணிக்கு நச்சரித்து சிக்கினர்
UPDATED : ஜன 24, 2025 06:18 AM
ADDED : ஜன 24, 2025 12:19 AM

சென்னை: விசாரணையின் போது, வலிப்பு வந்தது போல ஞானசேகரன் நடித்தது அம்பலமான நிலையில், அவரிடம், 'ஓசி' பிரியாணி கேட்டு நச்சரித்த போலீசார் ஆறு பேரின் மொபைல்போனை, சிறப்பு புலனாய்வு குழுவினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைதானார். அவரை, சிறப்பு புலனாய்வு குழு போலீசார், ஏழு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
டிஸ்சார்ஜ்
இரு தினங்களுக்கு முன், சென்னை அண்ணா நகர் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஞானசேகரனிடம் விசாரணை நடந்தது. அப்போது வலிப்பு ஏற்பட்டது போல தரையில் புரண்டு உள்ளார். அவரை, அதிகாலை 3:00 மணிக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவனையில் போலீசார் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, துாக்கமின்றி சோர்வாக காணப்பட்டுள்ளார்.
அவருக்கு வலிப்பு நோய் வந்ததற்கான அறிகுறிகள் இல்லை. அவரை இரவு முழுதும் துாங்க வைத்து, நேற்று காலை 4:30 மணியளவில், மீண்டும் பரிசோதனை செய்தனர். அவர் நல்ல நிலையில் இருப்பதும், அவருக்கு வலிப்பு வரவே இல்லை என்பதும், விசாரணையில் இருந்து தப்பிக்க வலிப்பு வந்தது போல நடித்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணையை துவக்கினர். இதற்கிடையே, ஞானசேகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, போலீசாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஞானசேகரன் கைதான, டிச., 25ம் தேதி, அடையாறு போலீஸ் நிலையம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணிபுரியும் போலீசார் ஆறு பேர், ஞானசேகரன் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்ச்சியாக தொடர்பு கொண்டது தெரியவந்தது. அவர்களின் மொபைல் போன்களை, சிறப்பு புலனாய்வு குழுவினர் பறிமுதல் செய்து, ஞானசேகரனிடம் விசாரணை நடத்தி உள்ளனர். ஞானசேகரன் பிரியாணி கடை நடத்தி வந்ததால், அவரிடம் ஓசி பிரியாணி கேட்டு நச்சரித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
எனினும், அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது. அதேபோல மாணவி பாலியல் வன்முறை எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரத்தில், அபிராமபுரம் போலீஸ் நிலைய எழுத்தர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, கோட்டூர்புரம் போலீசார் பதிவு செய்துள்ள, எப்.ஐ. ஆரில், அந்த எழுத்தரின் பெயரும் சேர்க்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

