கெடு நெருங்கியும் கொடிக்கம்பங்களை அகற்ற அரசியல் கட்சிகள் தயக்கம்
கெடு நெருங்கியும் கொடிக்கம்பங்களை அகற்ற அரசியல் கட்சிகள் தயக்கம்
UPDATED : ஏப் 11, 2025 04:17 AM
ADDED : ஏப் 10, 2025 11:51 PM

திருப்பூர் : வரும் 21ல் காலக்கெடு முடிவடையும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற, அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் முன்வரவில்லை.
ஐகோர்ட் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டத்தில் அரசு துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி, சாதி, மதம் சார்ந்த கொடிக்கம்பங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதுதொடர்பாக, கடந்த மார்ச் 27ல் அனைத்து கட்சியினரையும் அழைத்து, கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டு, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டம் முழுவதும், அகற்றப்படவேண்டிய பட்டியலில், தரையில் நடப்பட்ட 2,652 கம்பங்கள்; பீடத்துடன் கூடியவை 645 என, மொத்தம் 3,297 கொடிக்கம்பங்கள் உள்ளன. இவற்றை, இம்மாதம் 21ம் தேதிக்குள் அகற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காலக்கெடு முடிவடைய இன்னும் பத்து நாட்களே உள்ளநிலையில், பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் அக்கறை காட்டவில்லை. மொத்தம் 3,297 கொடிக்கம்பங்களில், 2,859 அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள்.
அரசு அலுவலக பகுதிகள், பஸ்ஸ்டாப் உள்பட பெரும்பாலான பொது இடங்களில், தனித்தனியாகவும், ஒரே இடத்தில் மூன்று முதல் நான்கு கம்பங்கள் சேர்ந்தநிலையிலும் உள்ளன.
திருப்பூர் - பல்லடம் ரோட்டில் ஒருங் கிணைந்த கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்புறம் மட்டுமே, ஆறு கொடிக்கம்பங்கள் உள்ளன. திருப்பூரில், அரசியல் கட்சியினரை பொறுத்தவரை, 10 முதல் அதிகபட்சம் 20 அடி உயரத்துக்குள்ளாகவே கொடிக்கம்பங்கள் வைத்துள்ளனர். கட்சியினர் மனது வைத்தால் போதும், கம்பங்களை சுலபமாக அகற்றிவிட முடியும்.
மின் கம்பிகளுக்கு அருகாமையில் உள்ள கம்பங்களை தன்னிச்சையாக அகற்றமுடியாது. மின் இணைப்பை துண்டித்து கம்பங்களை அகற்ற தேவையான உதவிகளை உடனடியாக செய்துதர மின்வாரியம் உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் தயாராக உள்ளனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளின் கொடிக்கம்பங்களே அதிக எண்ணிக்கையில் உள்ளன. தி.மு.க.,வினர் தாங்களாக முன்வந்து, 15 நாட்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்றவேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தங்கள் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். வழக்கமாக கட்சி தலைமையின் உத்தரவை உடனடியாக நிறைவேற்றும் தி.மு.க.,வினர், கொடிக்கம்பம் அகற்றுவதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.
தி.மு.க., திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் திருப்பூர் வடக்கு நகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, கட்சிக்கொடிகள் அனைத்து இடங்களிலும் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தி.மு.க., கொடி அகற்றப்படவில்லை என்பதுதான் நிஜம்.
மாநில ஜெ., பேரவை இணைச்செயலாளர் குணசேகரன் கூறுகையில், ''பொது இடங்களில் உள்ள அ.தி.மு.க, கொடிக்கம்பங்களை அகற்றி, சொந்த இடங்களில் வைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். லோக்சபா தேர்தலின் போது அகற்றப்பட்ட, பொது இடங்களில் உள்ள கம்பங்கள் மீண்டும் நடப்படவில்லை. கட்சி பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.
'தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் முதலில் அகற்றட்டும்; பின்னர் அதுகுறித்து யோசிப்போம்' என்பது பிற கட்சியினரின் மன நிலையாக உள்ளது.
செலவை வசூலிப்போம்
மின் கம்பிகள் குறுக்கீடு உள்பட கம்பங்களை அகற்றுவதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்றாதபட்சத்தில், அந்தந்த அரசு துறை அதிகாரிகள் களமிறங்கி, கொடிக்கம்பங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும். கம்பங்களை அதற்கான செலவி னங்களை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் அல்லது அமைப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.
- வருவாய்த்துறையினர்