கார்த்தி எம்.பி.,யை கட்சியை விட்டு நீக்க போராட்ட முடிவு
கார்த்தி எம்.பி.,யை கட்சியை விட்டு நீக்க போராட்ட முடிவு
UPDATED : ஜன 04, 2024 05:46 AM
ADDED : ஜன 04, 2024 12:44 AM

தேவகோட்டை: சிவகங்கை எம்.பி., கார்த்தியை காங்கிரசை விட்டு நீக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக கட்சியின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காங்.,கட்சியினர் இரு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். மாவட்ட தலைவராக சத்தியமூர்த்தி இருந்தார். சில நாட்களுக்கு முன்பு சஞ்சய்காந்தி மாவட்ட காங்., தலைவராக அறிவிக்கப்பட்டார். எனினும் இவரது தலைமையை ஏற்காததால் கட்சியினர் இரு பிரிவாக செயல்படுகின்றனர்.
இந்நிலையில் தேவகோட்டையில் நகர் காங்.,சார்பில் நகர் தலைவர் லோகநாதன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என்றாலும் எம்.பி.,கார்த்திக்கிற்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறியது. மாவட்ட முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, பொருளாளர் பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், முன்னாள் நகராட்சி தலைவர் வேலுச்சாமி, அகில இந்திய கமிட்டி உறுப்பினர் மீராஉசேன், மாவட்ட நிர்வாகிகள் காளையார்கோவில் ஆரோக்கியசாமி, கல்லல் உடையப்பன், இருதயராஜ், மானாமதுரை கணேசன், அகரம் ஆறுமுகம், நஜ்முதீன் உள்ளிட்டோர் பேசினர்.
நிர்வாகிகள் பேசியதாவது: கார்த்தி டிவிக்கு பேட்டியளித்த போது பிரதமர் மோடிக்கு எதிராக தகுதியானவர் யாருமில்லை என்றார். நெறியாளர் முன்னாள் தலைவர் ராகுல், தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை குறிப்பிட்டு கேட்டபோது மீண்டும் மோடிக்கு எதிராக தகுதியானவர் யாருமில்லை என்று கூறினார். அவரது பேட்டியை கண்டித்தும், காங்., தலைமைக்கு தகுதியில்லை எனக்கூறிய அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும். மாவட்டத்தில் ஒற்றுமையாக இருந்த கட்சியில் கோஷ்டியை உருவாக்கியதை கண்டிக்கத்தக்கது என பேசினர்.
உண்ணாவிரதம்
பொருளாளர் பழனியப்பன் கூறியதாவது: காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிரதமராக ஒவ்வொரு தொண்டர்களும் வேலை செய்கின்றனர். பா.ஜ., கட்சியை சேர்ந்தவரை போல் பிரதமர் மோடிக்கு நிகர் யாருமில்லை என எம்.பி., கார்த்தி கூறியுள்ளார். அவரை கட்சியை விட்டு நீக்காவிட்டால் மாவட்ட முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.