sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

புயலுக்கு பின் வெடிக்குது போராட்டம்! உணவு, குடிநீர் கிடைக்காமல் ஆவேசம்; விழுப்புரம், கடலுாரில் மக்கள் மறியல்

/

புயலுக்கு பின் வெடிக்குது போராட்டம்! உணவு, குடிநீர் கிடைக்காமல் ஆவேசம்; விழுப்புரம், கடலுாரில் மக்கள் மறியல்

புயலுக்கு பின் வெடிக்குது போராட்டம்! உணவு, குடிநீர் கிடைக்காமல் ஆவேசம்; விழுப்புரம், கடலுாரில் மக்கள் மறியல்

புயலுக்கு பின் வெடிக்குது போராட்டம்! உணவு, குடிநீர் கிடைக்காமல் ஆவேசம்; விழுப்புரம், கடலுாரில் மக்கள் மறியல்

9


ADDED : டிச 04, 2024 07:11 AM

Google News

ADDED : டிச 04, 2024 07:11 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வங்கக்கடலில் கடந்த, 25ம் தேதி உருவான 'பெஞ்சல்' புயல், 30ம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த புயலால், புதுச்சேரி, விழுப்புரத்தில், 50 செ.மீ., மழை, கடலுாரில் 25 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. இதனால், இந்த மாவட்டங்களில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன.

புயல் கடந்து, தொடர்ந்து பயணித்த பாதை முழுதும் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த வகையில், திருவண்ணாமலை, வேலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்க்க, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. கனமழையால், கடந்த, 1ம் தேதி இரவு போதிய முன்னறிவிப்பின்றி திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் நள்ளிரவில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்தது. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள், திடீரென தண்ணீர் வந்ததால் அச்சமடைந்தனர். கடலுார் மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு வெள்ளநீர் புகுந்தது. கலெக்டர் அலுவலகம், துணைமின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. கடலுார் - புதுச்சேரி சாலையில் நேற்றும் தண்ணீர் ஓடியதால் பஸ் போக்குவரத்து முழுதுமாக நிறுத்தப்பட்டது. கடலுார் மாநகரம் மற்றும் கிராம பகுதிகளில் துண்டிக்கப்பட்ட மின் சப்ளை சீராகாததால் மக்கள் அவதிப்பட்டனர்.

தண்ணீர் புகுந்துள்ள கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றி அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையாக மின் வினியோகம் வழங்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் மின்சாரம் வழங்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர். சின்ன கங்கணாங்குப்பம் உள்ளிட்ட சில கிராமங்களில் மறியல் நடந்தது. போலீசார் பேச்சு நடத்தி சமரசம் செய்தனர். தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு லைன்கள் மழையால் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளன. இன்னும் தொலைத்தொடர்பு பணிகள் சீரமைக்கப்படவில்லை.

தானியங்கள் சேதம்:


விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் பகுதி, மாடர்ன் ரைஸ் மில், விவசாய விளை பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகள் நிறைந்த பகுதி. மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்த மக்காச்சோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட தானியங்களை மூன்று பெரிய கிடங்குகளில் இருப்பு வைத்திருந்தனர். மழை வெள்ளத்தால் மூன்று கிடங்குகளிலும் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக, 20 கோடி ரூபாய் மதிப்பிலான தானியங்கள் முற்றிலுமாக மூழ்கி பாழாகின. கம்பு மூட்டைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும், ஏழு மாடர்ன் ரைஸ் மில்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இங்கிருந்த ஆயிரக்கணக்கான நெல், அரிசி மூட்டைகள் நீரில் மூழ்கி வீணானதுடன், மின் மோட்டார், ஜெனரேட்டர் உள்ளிட்ட மின் சாதனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதேபோன்று, சிறு வியாபாரிகள் இருப்பு வைத்திருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட பொருட்களும் பாழானது. ஒட்டுமொத்தமாக விளை பொருட்களின் சேத மதிப்பு மட்டும் 50 கோடி ரூபாயை தாண்டும் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொப்பையாறு:


தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி பஞ்., சேவியூர் கொட்டாயில் வசிக்கும் மக்களுக்கு, கம்மம்பட்டி பஞ்., வழியாக சாலை வசதி இல்லாததால், சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கருங்கல்பாளையம் வழியை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் செல்லும் வழியில், தொப்பையாறு செல்கிறது. அதை கடந்து அவர்கள் செல்ல வேண்டி உள்ளது. நேற்று முன்தினம் தொப்பையாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், 2,000 கன அடி உபரிநீர் தொப்பையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த நீர் மேட்டூர் அணைக்கு செல்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கால், விநாயகபுரம் பகுதியிலிருந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றைக் கடக்க, அதன் குறுக்கே அபாயகரமான முறையில் கயிறு கட்டி பெரியவர்கள் மட்டும் ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர். இதனால், 10 கிராம மக்களும் அத்தியாவசிய தேவைக்காக மற்ற இடங்களுக்கு செல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தின் வத்தல்மலையில் பெய்த கனமழையால் மொத்தம், 15 கொண்டை ஊசி வளைவுகளில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்தின்றி, 10 கிராம மக்கள் முடங்கி உள்ளனர்.

நெடுஞ்சாலை துண்டிப்பு:


சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில், ஏற்காட்டில் அதிகபட்சமாக, 9.8 செ.மீ., மழை பெய்ததால், மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய வெள்ளநீர், திருமணிமுத்தாறில் பெருக்கெடுத்தது. வெள்ள நீர் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கந்தம்பட்டியில், 3 அடி உயரத்துக்கு தேங்கியதால், நேற்று காலை, 6:00 மணி முதல் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

அந்த சாலையில் வந்த அரசு பஸ் ஒன்றும், லாரியும் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டன. பஸ் பயணியரை போலீசார் பத்திரமாக மீட்டனர். அவ்வழியாக சேலம் நோக்கி வந்த எல்லா வாகனங்களும், கொண்டலாம்பட்டி வழியே மாநகர் பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. கலெக்டர் அலுவலகம், சங்ககிரி பிரதான சாலை, நெத்திமேடு, லீபஜார், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து, ஐந்து மணி நேரத்துக்கு பிறகும், கந்தம்பட்டியில் மழைநீர் வடியாததால், தேசியநெடுஞ்சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரை உடைத்து, நெடுஞ்சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றினர். சேலம் புது பஸ் ஸ்டாண்டில், முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், பஸ்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தன.

வீராணம் ஊராட்சியில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், இதனால், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பள்ளிப் பட்டி வழியே சுற்றிவரும் நிலை ஏற்பட்டது. வீராணம் பிரதான சாலையில், அல்லிக்குட்டை பஸ் ஸ்டாப் அருகே, மக்கள் திரண்டு, நேற்று காலை, 8:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முட்டல் - கல்லுார் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதோடு, பாறைகள் உருண்டு விழுந்ததால், 10 மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணி அளவில் சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து, 30,000 கன அடியாக குறைந்தது. அணைக்கான நீர்வரத்து அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்திலிருந்து விலகி, சகஜ நிலைக்கு திரும்பியது.

பொன்முடி மீது மக்கள் சேறு வீச்சு; எதிர்ப்பால் உதயநிதி வருகை ரத்து


சாத்தனுார் அணை 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட மலட்டாறு கரையோரத்தில் உள்ள டி.எடையார், தொட்டிக்குடிசை, சின்ன செவலை, கண்ணாரம்பட்டு, தென்மங்கலம், இருவேல்பட்டு, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.
இதில், சில வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. சில வீடுகள் மண்ணரிப்பில் இடிந்து தரைமட்டமானது; விளைநிலங்கள் மூழ்கின. கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இருவேல்பட்டு ஆற்றுத் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகளும், அரசூர் கூட்ரோடு மற்றும் பாரதி நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளும் நீரில் மூழ்கி அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்யாமல், அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக மக்கள் ஆத்திரமடைந்தனர். இதைக் கண்டித்து, இருவேல்பட்டு கிராம மக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தத்திலும், அரசூர், ஆனத்துார், தணியாலம்பட்டு, தென்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் அரசூர் கூட்ரோடு பகுதி களிலும் நேற்று காலை, 8:00 மணிஅளவில் மறியலில் ஈடுபட்டனர்.
ஏ.எஸ்.பி., ரவீந்திர குப்தா, மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். பொதுமக்கள், 'கலெக்டர் நேரில் வர வேண்டும்' என, பிடிவாதமாக போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து, 9:30 மணியளவில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி, எஸ்.பி., ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அமைச்சர் பொன்முடி, காரில் அமர்ந்தபடியே மக்களிடம் பேச்சு நடத்தினார். ஆத்திரமடைந்த மக்கள், 'இரண்டு நாட்களாக வரவில்லை. இப்போது ஏன் வந்தீர்கள்?' என, ஆவேசமாக கேள்வி எழுப்பி, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசினர்.

Image 1352346
இதனால் அங்கு பதற்றம் நிலவியது. பின், காரில் இருந்து இறங்கிய பொன்முடி, அப்பகுதியில் சில வீடுகளை மட்டும் பார்வையிட்டு, அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, கலெக்டர் பழனி, எஸ்.பி., ஆகியோர் அரசூர் கூட்ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அவர்களின் சமரசத்தை ஏற்று, 11:15 மணியளவில் மக்கள் கலைந்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அரசியல் செய்வதற்காகவே சிலர், வேண்டுமென்றே சேற்றை வீசியுள்ளனர். என் மீதும், அதிகாரிகள் சட்டையிலும் பட்டது. யார் அதனை செய்தனர் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த நபர் எந்த கட்சியைச் சேர்ந்தவர்; சில மாதங்களுக்கு முன் அவரது கட்சி நிர்வாகிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையும் பலருக்கும் தெரியும்.
சேறு அடித்தவர்கள் குறித்து கவலையில்லை. இதை வைத்து அரசியலாக்க அவர்கள் விரும்பினர். ஆனால், நாங்கள் அதை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை. மழை நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு பொன்முடி கூறினார்.
அதேபோல, கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவாமூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல்வர் உதயநிதி பார்வையிடுவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஆய்வின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என, கிராம மக்கள் ஆவேசமடைந்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதனால், துணை முதல்வர் வரும்போது பிரச்னை வரலாம் எனக்கருதி, இப்பகுதிக்கு வரவேண்டாம் என, தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், உதயநிதி திருவாமூர் வருகை ரத்து செய்யப்பட்டு, மேல்பட்டாம் வழியாக கடலுார் சென்றார்.



மின் வினியோகம் விரைவில் சீரடையும்


விழுப்புரம் மாவட்டத்தில் மீட்புப் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 7.56 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், 24,000 மின் இணைப்பு கள் தடைபட்டுள்ளன. நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 900 களப்பணியாளர்கள் மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் வடியாத இடங்களில் பணி தடைபட்டிருந்தது. இன்று காலை முதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, விரைவில் மின் வினியோகம் சீரடையும்.
- செந்தில் பாலாஜி, மின்துறை அமைச்சர்

Image 1352347

'ரூ.6,000 நிவாரணம் கொடுங்க'


கடலுாரில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: சாத்தனுார் அணையில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டு, பெரிய பாதிப்பை மாநில அரசே ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரணமாக முதல்வர் அறிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசு ஒரு வீட்டிற்கு, 10,400 ரூபாய் கொடுத்துவிட்டு, மத்திய அரசிடம் பெற்றுக்கொள்ளலாம். மிக்ஜாம் புயலுக்கு 6,000, பெஞ்சல் புயலுக்கு 2,000 என்பதை ஏற்றம், இறக்கமாக பார்க்கிறோம். குறைந்தபட்சம் 6,000 ரூபாய் நிவாரணம் அறிவிக்க வேண்டும். புதுச்சேரி அரசு 5000 ரூபாய் அறிவித்துள்ளது.
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், மக்கள் கோபத்தைக் காட்டி உள்ளனர். ஆட்சியாளர்கள் இதை உணர்ந்து, திருந்த வேண்டும். முதல்வர், பிரதமரை சந்தித்து கடலுாரை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.



மொபைல் கிச்சன் வாகனங்கள்


விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய் நல்லுார், விக்கிரவாண்டி, சாத்தனுார் சுற்றியுள்ள 24க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏரிகள் உடைப்பால் அத்தியாவசியத் தேவையான அரிசி தண்ணீரில் அடித்துச் சென்றதால், ரேஷன் கடைகளை திறக்கக் கூறியுள்ளோம். இந்த பகுதிகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் பலரின் வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால்தான் சில கடைகளை திறப்பதில் பிரச்னை இருந்தது. தற்போது அனைத்து ரேஷன் கடைகளையும் திறக்கக் கூறியுள்ளோம். மழையால் பாதித்த குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, பருப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இனிவரும் பேரிடர் காலங்களில் அந்தந்த பகுதிகளில் 24 மணி நேரம் செயல்படும் கிச்சன் வாகனங்கள் ஏற்பாடு செய்து உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
- ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவுத்துறை அரசு முதன்மை செயலர்



போக்குவரத்து இயல்பு நிலை


விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையம் பம்பை ஆறு, சாத்தனுார் அருகே சங்கராபரணி ஆற்று பகுதியில் ரயில்வே பாலம் தண்டவாளத்தின் கீழ், வெள்ளநீர் அபாய நிலையில் தொட்டுச் சென்றதால், நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணி முதல் பாதுகாப்பு கருதி சென்னை - திருச்சி மார்க்க ரயில்கள் நிறுத்தப்பட்டன.
வெள்ளநீர் படிப்படியாகக் குறைந்ததால், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல் ஒவ்வொரு ரயிலாக புறப்பட்டுச் சென்றன. வழக்கம் போல சென்னை - திருச்சி மார்க்கத்தில் இருந்து வந்த அனைத்து ரயில்களும், விழுப்புரம் வழியாக நேற்று முதல் இயக்கப்பட்டன.
இதேபோல சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலை மார்க்கத்தில், விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் மலட்டாற்று வெள்ள நீர் புகுந்ததால், நேற்று முன்தினம் காலை, 9:00 மணி முதல் அந்த வழியில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. உளுந்துார்பேட்டை, மடப்பட்டு பகுதியில் இருந்து, பண்ருட்டி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அரசூர் பகுதியில் வெள்ள நீர் வடிந்ததால், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல் ஒரு மார்க்க சாலையை சீரமைத்து, சென்னை - திருச்சி மார்க்க வாகனங்களை இயக்கினர்.



- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us