தேர்தல் வெற்றிக்காக எந்த தியாகத்திற்கும் தயார்: ஜெ., நினைவிடத்தில் பழனிசாமி உறுதிமொழி
தேர்தல் வெற்றிக்காக எந்த தியாகத்திற்கும் தயார்: ஜெ., நினைவிடத்தில் பழனிசாமி உறுதிமொழி
ADDED : டிச 06, 2025 05:46 AM

சென்னை: 'வரும் 2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்காக, எந்த தியாகத்திற்கும் தயார்' என, ஜெயலலிதா நினைவிடத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம், தமிழகம் முழுதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் துாவி, பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயகுமார், வளர்மதி, முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின், பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க.,வினர் எடுத்த உறுதிமொழி:
* பொய்யான வாக்குறுதிகள் பல தந்து, தமிழக மக்களை ஏமாற்றி, குடும்ப ஆட்சி கோலோச்சும் தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம். அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை நிறுத்திய தி.மு.க., ஆட்சியின் கொட்டத்தை அடக்குவோம்
* 'நீட்' தேர்வு ரத்து, கல்விக்கடன், நகைக்கடன் ரத்து, மாதந்தோறும் மின் கணக்கீடு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம் என, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.,வின் பொய் முகத்தை தோலுரித்துக் காட்டுவோம்
* குடிநீர், கழிவுநீர் கட்டணம், சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் உயர்வு என, ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தந்திர மாடல், ஏமாற்று மாடல் தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்
* அ.தி.மு.க.,வை காப்போம். வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம். 2026ல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய வீர சபதம் ஏற்போம்
* எம்.ஜி.ஆர்., வகுத்த பாதையில், ஜெயலலிதாவின் கொள்கை வழியில் நின்று அரும் பணியாற்றி, தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைத்திடுவோம். தேர்தலில் வெற்றி பெற்று, ஜெயலலிதாவின் ஆன்மாவை மகிழ்விப்போம். இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

