UPDATED : ஜன 25, 2025 02:00 PM
ADDED : ஜன 25, 2025 11:15 AM

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக பிடிபட்டவர்கள் தான் அதிகம். அதிலும் பட்டா மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக லஞ்சம் வாங்கியதில் வருவாய் துறை முதலிடத்தில் உள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் சில அதிகாரிகள், அலுவலர்களால் ஒட்டுமொத்த அரசு துறைகளுக்கும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.
வருவாய் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் வாரியம், போலீஸ், தீயணைப்பு என பாகுபாடின்றி லஞ்சம் ஊடுருவிஉள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கிய வழக்குகளில், 2023 - 24ல் அதிகபட்சமாக, 155 வழக்குகளை போலீசார் விசாரிக்கின்றனர்.
வழக்கில் விசாரணை
கடந்த 2023 - 24ல் லஞ்சம் வாங்கியதாக வருவாய் துறையினர் மீதுதான் அதிகபட்சமாக, 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன. அதே சமயம் மின்வாரியம் மீது --- 26, ஊரக வளர்ச்சித்துறை - 22, உள்ளாட்சி அமைப்புகள் - 21 வழக்குகள், சர்வே - 18, போலீஸ் - 10, பத்திரப்பதிவு - 8, சமூக நலத்துறை - 4 வணிக வரித்துறை, கூட்டுறவு, வேளாண், கல்வித் துறைகளில் தலா 1, மருத்துவத்துறை - 2, தொழிலாளர் நலத்துறை - 3 வழக்குகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

