ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத சரிவு: ஆர்.பி.ஐ., எச்சரிக்கையால் சிறிய மீட்சி
ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத சரிவு: ஆர்.பி.ஐ., எச்சரிக்கையால் சிறிய மீட்சி
UPDATED : நவ 23, 2024 01:20 AM
ADDED : நவ 23, 2024 01:17 AM

புதுடில்லி: கரன்சி வணிகத்தில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, நேற்று, 84 ரூபாய் 41 காசு என்ற சரிவை தொட்டது.
நாட்டின் கரன்சி மதிப்புக்கு எதிராக ஊக வணிகம் செய்வதை தடுக்குமாறு, வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டதால், ரூபாய் மதிப்பு 6 காசு உயர்ந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கியதில் இருந்தே, அந்நாட்டின் டாலர் மதிப்பு, சர்வதேச அளவில் பல நாடுகளின் கரன்சிக்கு எதிராக வலுப்பெறத் துவங்கியது.
நவம்பர் 2022க்கு பின், பன்னாட்டு கரன்சிகளுக்கு எதிரான டி.எக்ஸ்.ஒய்., டாலர் குறியீடு, மிக அதிகபட்சமாக 108.09 ஆக நேற்று உயர்ந்தது.
அதோடு, இந்திய சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட 33,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை நவம்பரில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றதும், ரூபாய் மதிப்பை வீழ்ச்சி காணச் செய்தது.
யூரோ மற்றும் பவுண்டு ஆகிய கரன்சிகளின் பலவீனத்தால், டாலர், நேற்று கணிசமான உயர்வு கண்டது. இதனால், ரூபாய் மதிப்பு 84 ரூபாய் 41 காசாக வீழ்ச்சி கண்டது.
தன்வசமுள்ள டாலரில், ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி விற்பனை செய்ததால், ரூபாய் மதிப்பு மேலும் சரியாமல் தடுக்கப்பட்டது.
மேலும், கரன்சி வணிகத்தில், இந்திய ரூபாய்க்கு எதிரான ஊக வணிகம் கூடாது என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியானது.
இதுவும் ரூபாய் மதிப்பு, சரிவில் இருந்து சிறிது மீளக் காரணமானது.
நவம்பரில் இந்திய ரூபாய் மதிப்பு
0.5% சரிவு
மற்ற ஆசிய நாடுகளின் கரன்சி
0.9% - 2.2% சரிவு

