வரி வசூலில் ஊரக வளர்ச்சி துறை தீவிரம்; தெரு தெருவாக முகாமிட்டு எச்சரிக்கை
வரி வசூலில் ஊரக வளர்ச்சி துறை தீவிரம்; தெரு தெருவாக முகாமிட்டு எச்சரிக்கை
ADDED : மார் 24, 2025 05:57 AM

சென்னை: வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி போன்றவற்றை வசூலிப்பதற்காக, சிறப்பு முகாம்களை ஊரக வளர்ச்சித்துறை நடத்தி வருகிறது.
சென்னையை தவிர்த்து 37 மாவட்டங்களில், 79,395 குக்கிராமங்களை உள்ளடக்கிய 12,525 ஊராட்சிகள் உள்ளன. இவை, 388 வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கீழ் இயங்குகின்றன. ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியம் வாயிலாகவும், வரி வருவாய் மற்றும் வரியில்லாத வருவாய் வாயிலாகவும், நிதி ஆதாரங்கள் கிடைக்கின்றன.
ஊராட்சிகளில் இயங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. மனைப்பிரிவுகள் அமைப்பது, கட்டட வரைபடத்திற்கு அனுமதி வழங்குவது, தொழிற்சாலைகளுக்கான கட்டணம், வாகன பார்க்கிங், சந்தைகள், அபராதங்கள், கனிமம் மற்றும் சுரங்க ஏலம் வாயிலாக வரியில்லா வருவாய் கிடைக்கிறது.
பொதுமக்கள் வரி செலுத்துவதற்காக, ஊரக வளர்ச்சி துறை சார்பில், தனி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுதும் ஊரகப்பகுதிகளில் உள்ள 1.44 கோடி வீடுகளின் விபரங்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின்னணு கருவி வாயிலாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
நடப்பாண்டுக்கான வரி வசூல் பணி அனைத்து ஊராட்சிகளிலும் துவக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் அரசு சிக்கியுள்ள நிலையில், ஊரகப்பகுதிகளில் வரி வருவாயை அதிகரித்து, அதன் வாயிலாக, ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, ஊரக வளர்ச்சி துறை, தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளது.
அனைத்து ஊராட்சிகளிலும், ஊராட்சி பணியாளர்கள், ஒவ்வொரு தெருவிலும் சிறப்பு முகாம் நடத்துகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள மக்களை முகாமிற்கு வரவழைத்து வரி வசூல் சரிபார்க்கப்படுகிறது. வரி செலுத்தியோருக்கு ரசீது வழங்கப்படுகிறது. வரி நிலுவை சரிபார்க்கப்படுகிறது.
மேலும், குப்பை அள்ளும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள 'ஸ்பீக்கர்'களில், அனைவரும் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரியை விரைவாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.