முதல்வர் அறிவித்து ஓராண்டாகியும் அமலுக்கு வராத ஒற்றை சான்று முறை: சீர்மரபினர் வேதனை
முதல்வர் அறிவித்து ஓராண்டாகியும் அமலுக்கு வராத ஒற்றை சான்று முறை: சீர்மரபினர் வேதனை
ADDED : மார் 24, 2025 05:41 AM

சென்னை: 'சீர்மரபினருக்கு ஒற்றை சான்றிதழ் வழங்குவதற்கான, அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சீர்மரபினருக்கு, மத்திய அரசின் உதவிகளை பெற, டி.என்.டி., என்றும், மாநில அரசின் உதவிகளை பெற, டி.என்.சி., என்றும் இரட்டை சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, டி.என்.டி., என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் என, சீர்மரபினர் மக்கள், பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'டி.என்.சி., சான்றிதழை, 1979ல் இருந்தது போல, டி.என்.டி., என்று பெயர் மாற்றம் செய்வேன்' என, முதல்வர் வாக்குறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து, '2024 மார்ச், 16ம் தேதி, சீர்மரபினருக்கு, டி.என்.சி., - டி.என்.டி., என இரட்டை சான்றிதழ் வழங்குவதற்கு பதிலாக, டி.என்.டி., என, ஒற்றை சான்றிதழ் வழங்கப்படும்' என, முதல்வர் அறிவித்தார்.
மார்ச், 19ம் தேதி, சீர் மரபினர் நலச்சங்கம் மற்றும், 68 சமுதாய நிர்வாகி கள், முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது அறிவிப்பை நடைமுறைப்படுத்த, டி.என்.டி., சான்றிதழ் வழங்க, அரசாணை வெளியிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதைக்கேட்ட முதல்வர், நீங்கள் ஊருக்கு போய் சேருவதற்கு முன்பே, அரசாணை வரும் என்று உறுதி அளித்துள்ளார்.
அந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, விருதுநகர் மாவட்டத்தில், தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்வர் பேசியபோது, 'டி.என்.டி., சான்றி தழ் வழங்க, அரசாணை போட்டுவிட்டேன்' என்றார். ஆனால், முதல்வர் அறிவித்து ஓராண்டாகியும் அரசாணை வெளியாகவில்லை. இது, சீர்மரபினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சீர்மரபினர் நலச்சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.கே.துரைமணி கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலின் போது, அரசாணை வெளியிட்டு விட்டதாக முதல்வர் அறிவித்தார். ஆனாலும், இன்று வரை அரசாணை வரவில்லை. அ.தி.மு.க., அரசில், டி.என்.ஏ., - டி.என்.டி., என இரண்டு சான்றிதழ் தனித்தனியே வழங்கினர்.
தற்போதை அரசு, இரட்டை சான்றிதழ் முறையை மாற்றி, ஒரே சான்றிதழ் வழங்குவதாக கூறி, ஒரே தாளில் இரட்டை சான்றிதழ் வழங்குகின்றனர். முதல்வர் ஒற்றை சான்றிதழ் வழங்குவதாக அறிவித்து, ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இதுவரை ஒற்றை சான்றிதழ் வழங்க, அரசாணை வெளியிடப்படவில்லை. அதை வெளியிட, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.