sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சுங்க வரி குறைப்பால் தங்கம் கடத்துவது சரிந்தது!: 'ரிஸ்க்' எடுக்க பயந்து பதுங்கிய 'குருவிகள்'

/

சுங்க வரி குறைப்பால் தங்கம் கடத்துவது சரிந்தது!: 'ரிஸ்க்' எடுக்க பயந்து பதுங்கிய 'குருவிகள்'

சுங்க வரி குறைப்பால் தங்கம் கடத்துவது சரிந்தது!: 'ரிஸ்க்' எடுக்க பயந்து பதுங்கிய 'குருவிகள்'

சுங்க வரி குறைப்பால் தங்கம் கடத்துவது சரிந்தது!: 'ரிஸ்க்' எடுக்க பயந்து பதுங்கிய 'குருவிகள்'

1


UPDATED : செப் 16, 2024 06:12 AM

ADDED : செப் 16, 2024 02:40 AM

Google News

UPDATED : செப் 16, 2024 06:12 AM ADDED : செப் 16, 2024 02:40 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் கணிசமாக குறைய துவங்கியுள்ளன.

தென் ஆப்ரிக்கா, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு ஓராண்டிற்கு பல ஆயிரக்கணக்கான கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. மற்ற நாடுகளுக்கு இடையிலான போர்சூழல்கள், உலகளாவிய பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது தொடர்கிறது. காரணம், நாட்டில் தங்கம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 55 சதவீதத்திற்கு மேல் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தில் தங்கத்தின் நுகர்வு அதிகமாக உள்ளது. இதனால், மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, சென்னைக்கு விமானங்கள் வாயிலாக தங்கம் கடத்தல் நடக்கிறது.

வெளிநாடுகளை விட தமிழகத்தில் தங்கத்தின் விலை அதிகம். அதாவது, 1 கிலோ தங்கம், மலேஷியாவில் 60 லட்சம்ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால், தமிழகத்தில் அது 70 லட்சம் ரூபாயாக இருக்கிறது. பல நாடுகளிலும் இதுபோன்ற நிலையே உள்ளது. அதனால், தங்கத்தை கடத்தி விற்றால், 10 லட்சம் ரூபாய் வரை கடத்தல்காரர்களின் கையில் தங்குகிறது என்பதால், கடத்தல் செய்வதையே பிரதான தொழிலாக பலர் செய்கின்றனர்.

சர்வதேச அளவில் சிண்டிகேட் அமைத்து, சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்லும் சிலர், 50 முதல் 200 கிராம் வரை தங்கத்தை கடத்தி வருகின்றனர். இதற்காக, 'குருவி'கள் என்ற பெயரில் வருவோர், தங்கள் உள்ளாடைக்குள்,மின் சாதனங்கள், சானிட்டரி உள்ளிட்ட பொருட்களில் ஒளித்துவைத்து கடத்துகின்றனர்.

தங்கத்தை பசையாகவும், சாக்லேட், மாத்திரை வடிவிலும் மாற்றி எடுத்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு, பிரத்யேக பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சில ரசாயனங்களை தங்கத்தில் கலக்கும்பட்சத்தில், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள 'டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்' கருவியால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவில், இந்த திருட்டு சம்பவம் அரங்கேறுகிறது.

அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் கண்ணில் மண்ணை துாவி, அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டாலும், கடந்தாண்டு மட்டும் 303 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 218 கோடி ரூபாய். கடந்த எட்டு மாதங்களில், 137 கோடி ரூபாய் மதிப்பில், 205 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரியை 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்ததால், விமான நிலையம் வாயிலாக தங்கத்தை கடத்துவது குறைந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

இந்தியாவில் 15 சதவீதம் சுங்க வரி இருந்தபோது, கடத்தல் அதிகம் நடந்தது. நடப்பாண்டு ஜூலையில் நடந்த மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15ல் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது கணிசமான அளவில் குறைய துவங்கியுள்ளது.

முன்பைவிட குறைவான தொகையே கமிஷனாக கிடைக்கும் என்பதால், 'ரிஸ்க்' எடுக்க தயங்கி, பலரும் கடத்தலில் ஈடுபடமாட்டார்கள். தவிர, அதிகாரிகள் கண்காணிப்பும் தீவிரமாக இருப்பதால், தங்கம் கடத்தல் சம்பவங்கள் இனி மெல்ல மெல்ல குறையும். இவ்வாறு சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர்.

முறையாக நடக்கிறது


மத்திய அரசின் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி குறைவுக்கு பின், நகை வியாபாரம் நல்லபடியாக நடக்கிறது. கடத்தி கொண்டுவரும் தங்கத்தை சிலர், கள்ளச்சந்தையில் விற்று வந்தனர்; தற்போது அவ்வாறு செய்வது குறைந்து வருகிறது.

- கோல்ட் குரு சாந்தகுமார்

நகைக்கடை உரிமையாளர், சென்னை

8 மாதங்களில் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்கம்


மாதம் கிலோ மதிப்பு வழக்கு பதிவு கைது
ஜனவரி - 31.37 - 17.19 - 75 - 11
பிப்., 34.6 - 18.8 - 78 - 11
மார்ச் 24.73 - 14.18 - 86 - 3
ஏப்., 14.87 - 9.18 - 35 - 7
மே 18.83 - 12 - 39 - 12
ஜூன் 43.9 - 27.7 - 61 - 19
ஜூலை 24.1 - 29.74 - 66 - 5
(18 இந்தியர்கள் ஒரு வெளிநாட்டு பயணி)
ஆக., 12.8 - 8.1 - 41 - 8
(7 இந்தியர்கள் 1 மலேசிய பயணி)
மொத்தம் 205 - 125 கோடி ரூபாய் - 481 - 76
சுங்க வரி குறைப்புக்கு பின், நடப்பாண்டில் கடந்த ஆகஸ்டில் குறைவாக 8.1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மட்டுமே சிக்கியுள்ளது.சென்னை, பெங்களூரு உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 கிலோ வரை தங்கம் சிக்குகிறது.கடத்தல் குருவிகள் நள்ளிரவு நேரத்தில், கடத்தல் சம்பவங்களை மேற்கொள்கின்றனர்



கடத்தல் மாபியா நெட்வொர்க்


தங்கம் கடத்தலுக்கென உலக அளவில் பெரிய 'மாபியா நெட்வோர்க்' செயல்படுகிறது. இவர்களுக்கு 'ஹவாலா கும்பல்' உதவுகிறது. 'டார்க் நெட்' வாயிலாக தங்கம், விலங்குகள், ஆயுதங்கள், போதை பொருட்கள் என பலவற்றுக்கு, இவர்கள் வாயிலாக கடத்தப்படுகிறது. இந்த கும்பலின் தலைமையை கண்டுபிடிப்பது சவால் மிகுந்தது.-கடத்தல் சிண்டிகேட் - மிடில் மேன் எனும் இடைத்தரகர்கள் - கேரியர் எனும் குருவிகளால் தான், கடத்தல் கும்பல் செயல்படுகிறது. இதில், சிண்டிகேட் தலைவனுக்கும் குருவிகளுக்கும் எந்த நேரடி தொடர்பும் இருப்பது கிடையாது.
'மிடில் மேன்' எனும் இடைத்தரகர்கள் வாயிலாகவே, குருவிகள் தங்கத்தை கடத்தி வருகின்றனர். சுங்க சோதனை முடித்து வெளியே வரும் குருவிகளிடமிருந்து, மற்றொரு நபர் பெற்றுக் கொள்வார். அவருக்கான கமிஷன் தரப்படும்.100 கிராம் கடத்தல் தங்கத்துக்கு 70,000 ரூபாயில் இருந்து 1 லட்சம் வரை, குருவிகளுக்கு கமிஷன் கிடைக்கிறது. அதிகாரிகளிடம், கடத்தல் குருவிகளே அதிகளவில் மாட்டிக் கொள்வர். மிக அரிதாக, கடத்தலுக்கு முக்கிய காரணமானவர்களும் சிக்குவர்.
இவ்வாறு பிடிபடும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு சிறை தண்டனையும் வழங்கப்படும்; அவர்களது பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்படும்.---வெளிநாடுகளில் இருந்து கிராம் அளவில் எடுத்து வரப்படும் தங்கம், விமான நிலைய கழிப்பறையில் குப்பை தொட்டி, மறைவான இடங்களில் பதுக்கப்படுகிறது.
விமான நிலைய வளாகத்தில் கடை வைத்துள்ள சிலர், அந்த கழிப்பறைக்கு சென்று தங்கத்தை வெளியே எடுத்துச் செல்வர். இவ்வாறு இரு மாதங்களில் 167 கோடி ரூபாய் மதிப்புடைய 267 கிலோ தங்கத்தை கடத்தியுள்ளனர். இது குறித்து அறிந்த சுங்கத்துறையினர், இந்த கடத்தலில் ஈடுபட்ட ஒன்பது பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என்பதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை.



கண்காணிப்பது யார்?

நாட்டின் வருவாய்க்கு இழப்பு விளைவிக்கும் நோக்கில் செயல்படும் அனைத்து செயல்களையும் கண்காணிக்க, மத்திய அரசின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் உள்ளது. இதன் கீழ் சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு அமைப்புகள் உள்ளன.மற்ற நாடுகளில் இருந்து பெருமளவு கடத்தப்படும் விபரம் குறித்து, மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு, வெளிநாடுகளில் இருக்கும் உளவாளிகள், ரகசிய தகவல்தருவர். அதன் அடிப்படையில், சந்தேகிக்கும்படி உள்ள பயணியரை சோதனை செய்வர். சில கடத்தல் கும்பலின் உரையாடல்கள், நகர்வுகள் உள்ளிட்டவற்றை இவர்கள் கண்காணிப்பர்.சிண்டிகேட் - மிடில் மேன் எனும் இடைத்தரகர் - கேரியர் எனும் குருவிகள் இணைந்து தங்கம் கடத்தல் நடக்கிறது. இதில், பெரும்பாலும் குருவிகள் மட்டுமே சிக்குவர். மற்றவர்கள் குறித்து எந்த தகவலும் வெளிவராது.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us