ADDED : ஜூலை 25, 2026 04:13 AM

சென்னை: 'இடையூறு ஏற்படுத்தும் சிலரை திருத்தவே முடியாது' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகத்தை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனி சாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வின் அடுத்த கட்ட பணிகள் குறித்து, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து, பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, விழுப்புரம் மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதுவரை நடந்த ஆலோசனை கூட்டங்களின்போது, அதிக கூட்டம் வரவில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர் சண்முகத்துக்கு பதில், விழுப்புரம் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்ட பசுபதி, தன் பலத்தைக் காட்ட, சென்னைக்கு ஏராளமானோரை அழைத்து வந்தார்.
நீண்ட நாட்களுக்கு பின், அதிக கூட்டத்தைப் பார்த்த பழனிசாமி உற்சாகமானார். முதன்முறையாக கட்சி அலுவலகத்தின் 'பால்கனி'யில் நின்று, தொண்டர்களை நோக்கி கையசைத்தார். அதை தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், சண்முகம் மீது, கட்சி நிர்வாகிகள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த பழனிசாமி, 'விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,வில், தடைகள் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டன. இனி, யார் இடையூறும் இல்லாமல், வேகமாக செயல்படலாம். ஆனாலும், சிலரை திருத்தவே முடியாது; அவர்களை பற்றி கவலைப்படாமல் செயல்படுங்கள்.
'விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம். அப்போது, விழுப்புரம் அ.தி.மு.க., கோட்டை என்பதை நிரூபிப்போம்' என கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்துக்கு பின், பசுபதி கூறுகையில், ''சண்முகத்தின் குடும்பத்தால், அ.தி.மு.க.,வினரின் கைகள் கட்டப்பட்டு, அடிமையாக இருந்தனர். ''தற்போது, அடிமைக்கயிறு அகற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தலைமை அலுவலகம் வந்துள்ளனர். விழுப்புரத்தைச் சேர்ந்த 1,150 நிர்வாகிகள் ராஜினாமா என்பது வடிகட்டிய பொய்.
''அவர்கள் கொடுத்த கடிதங்களில் இடம் பெற்ற வல்லம் வடக்கு ஒன்றிய செயலர் விநாயகமூர்த்தி, அமெரிக்காவில் இருக்கிறார். செஞ்சி பேரூர் செயலர் சுந்தர்ராஜன் எங்களோடு இங்கு வந்துள்ளார். ''இப்படி பலரின் கையெழுத்தை, அவர்களே போலியாக போட்டு கொடுத்து உள்ளனர்,'' என்றார்.
