பா.ம.க., பொதுக்குழுவில் நெருப்பை கக்கிய சுகந்தன்; ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்
பா.ம.க., பொதுக்குழுவில் நெருப்பை கக்கிய சுகந்தன்; ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்
ADDED : டிச 31, 2025 05:23 AM

-நமது நிருபர்-
திண்டிவனத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டு அருகே ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதை அடுத்து, இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலத்தில் நேற்று முன்தினம் பா.ம.க., பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், ராமதாஸ் பேரனும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சுகந்தன், பா.ம.க., தலைவர் அன்புமணியை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகளை, அன்புமணியின் ஆதரவாளரான பா.ம.க., இளைஞரணி நிர்வாகி ராஜேஷ், சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் ஆதரவாளரான வழக்கறிஞர் ராஜாராம், அன்புமணி ஆதரவாளர் ராஜேஷை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டின் அருகே நேற்று காலை, வழக்கறிஞர் ராஜாராமும், ராஜேஷும் வந்தனர்.
இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு, பின் கைகலப்பாக மாறியது. இருவருடைய ஆதரவாளர்களும், தாக்கிக் கொண்டனர்.
மோதல் தொடர்பாக, இரு தரப்பும் மாறி மாறி புகார் அளிக்க, இரு தரப்பினர் மீதும் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இரு தரப்பினரும் திண்டிவனம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட, ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினர்.
அன்புமணி தரப்பினரை கோபப்படுத்தும் அளவுக்கு, ராமதாஸ் நடத்திய பா.ம.க., பொதுக்குழுவில் அவருடைய பேரன் சுகந்தன் அப்படி என்னதான் பேசினார்?
அவருடைய பேச்சு:
பா.ம.க.,வில், என் சகோதரர் முகுந்தனுக்கு பதவி வழங்கியபோது, கட்சியின் நிறுவனரான ராமதாஸை மேடையில் வைத்துக்கொண்டு, 'அவனுக்கு அனுபவம் போதாது' என்றார் அன்புமணி. மேலும், மேடையிலேயே, கால்மேல் கால் போட்டுக்கொண்டு, மைக்கை துாக்கி வீசியது, எவ்வளவு கேவலம்?
கடந்த, 2004ல் அன்புமணி, பா.ம.க.,வில் சேர்ந்தபோது, இளைஞர் அணி தலைவர், அதைத் தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் என எவ்வளவு பதவிகள் கொடுக்கப்பட்டன?
அன்புமணியாகிய நீங்கள் அமைச்சர் ஆகலாம்; என் தம்பி முகுந்தன், கட்சி பதவிக்கு வரக்கூடாதா? உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கென்றால் தக்காளி சட்னியா?
வரலாற்றில், அப்பாவை எதிர்த்த அவுரங்கசீப்பில் இருந்து அன்புமணி வரைக்கும் பல பேர் இருக்கின்றனர். தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹானின் மகன் தான் அவுரங்கசீப்.
பதவி வெறிக்காக ஷாஜஹானை, சிறையில் அடைத்து சாகடித்தவர் அவுரங்கசீப். பதவி வெறி கண்ணை மறைத்தால், பெத்த தகப்பன் கூட எதிரியாகத்தான் தெரிவார். அவமானப்படுத்த வாய் கூசாது.
ராமதாஸ், எனக்கு தாத்தா மட்டுமல்ல, ஹீரோ. அவர் எந்த பதவியிலும் அமரவில்லை. தன் மகனை பதவியில் வைத்து அழகு பார்த்தார். 2026ல் யார் ஹீரோ, யார் ஜீரோ என்பது தெரிந்துவிடும். இவ்வாறு சுகந்தன் பேசினார்.

