சூப்பர் பாஸ்ட் இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; திருப்பத்தூர் மாநாட்டில் ஸ்டாலின் பெருமிதம்
சூப்பர் பாஸ்ட் இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; திருப்பத்தூர் மாநாட்டில் ஸ்டாலின் பெருமிதம்
UPDATED : பிப் 15, 2026 10:00 AM
ADDED : பிப் 15, 2026 04:04 AM

சென்னை: ''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி குறைந்தது, இரண்டரை கோடி ஓட்டுகளைப் பெற, ஓய்வின்றி உழைக்க வேண்டும்,'' என, கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
திருப்பத்துாரில், நேற்று நடந்த, தி.மு.க., வடக்கு மண்டல ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில், அவர் பேசியதாவது:
இந்தியா முழுக்க எந்த 'டிரண்ட்' இருந்தாலும், தமிழகத்தின் நிரந்தர 'டிரண்ட்' கருப்பு சிவப்புதான்.
வரும் தேர்தலில், குறைந்தது 2.50 கோடி ஓட்டுகளை பெற்றாக வேண்டும். நேற்று முன்தினம் மகளிர் உரிமைத் தொகை பெறும், 1.31 கோடி குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில், 5,000 ரூபாய் வரவு வைத்துள்ளோம். தேர்தலை காரணம் காட்டி, பா.ஜ.,வை சேர்ந்தவரை வைத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இத்திட்டத்தை நிறுத்த சதி செய்தனர்.
தமிழகத்திற்காக பேச துணிவில்லாமல், கொத்தடிமை சாசனம் செய்யும் பழனிசாமி, எனக்கு சவால் விட்டுள்ளார். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அடையாளமாக இருப்பவர் பழனிசாமி. சசிகலா காலில் விழுந்து பதவி பெற்று, அவரது காலையே வாரி விட்டவர்.
ஊழிலின் ஊற்றுக் கண்ணான, அ.தி.மு.க.,வின் பாரம்பரியத்தை காக்க, உறவினர்களுக்கு டெண்டர்கள் அள்ளிக் கொடுத்தவர் பழனிசாமி. அவதுாறுகளால் தி.மு.க., அரசை களங்கப்படுத்த நினைக்கும், அவரது பேச்சை மக்கள் நம்ப மாட்டார்கள்.
பா.ஜ.,வின் டப்பா இன்ஜின் முன்னால், தி.மு.க.,வின் சூப்பர் பாஸ்ட் இன்ஜின், ஒருபோதும் தலைகுனியாது. மக்களை சந்திக்கும்போது, பா.ஜ., அரசின் துரோகங்களையும் சொல்ல வேண்டும். புறவாசல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய நினைக்கும், பா.ஜ.,வின் எண்ணத்தை தடுக்க வேண்டும். பழனிசாமி தலைமையை, அவருடைய கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை.
எல்லோரும் ஒரிஜினல் முதலாளியான, பா.ஜ.,விடம் நேரடியாக சரணடைகின்றனர். அ.தி.மு.க., என்பது பா.ஜ., பயணிக்க உதவும் கிளை என்பதை, மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரையே மாற்ற துடிப்பவர்கள், தமிழகத்திற்குள் வந்தால் எப்படி இருக்கும் என்பதை, மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க.,வில் நிலோபர்
கடந்த சில ஆண்டுகளாக, அரசியல் நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், நேற்று கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினார். பின், திருப்பத்துாரில் நடந்த தி.மு.க., மாநாட்டிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.

