சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு விஜய் கட்சியில் திக்... திக்... !
சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு விஜய் கட்சியில் திக்... திக்... !
ADDED : அக் 13, 2025 01:07 AM

கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்ப வத்துக்கு, காவல் துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே காரணம் என, எதிர்கட்சிகள் தமிழக அரசு மீது கடும் விமர்சனங்களை வைத்தன.
அதேநேரம், காவல் துறை கட்டுப்பாடுகளை விஜய் பின்பற்றாததே நடந்த சம்பவத்துக்கு காரணம் என ஆளும் கட்சித் தரப்பில் கூறினர்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தை விசாரித்து வந்த கரூர் போலீசாரின் விசாரணைக்கு தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம், வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.
அஸ்ரா கர்க்கும் கரூருக்குச் சென்று, உயிர் பலிக்கு காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்காத த.வெ.க., தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 'சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது தவறு; நடந்த சம்பவத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும்' என்று முறையிட்டனர்.
'இந்த விஷயத்தில், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவும் முரண்பட்டு இருக்கின்றன.
'இதில் நீதிமன்ற நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை' என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா ஆகியோர் கருத்து தெரிவித்து, வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரூர் சம்பவத்துக்குப் பின், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த த.வெ.க., திடுமென பின் வாங்கியது. 'திட்டமிடல் சரியில்லாததாலேயே உயிர் இழப்பு சம்பவம் நடந்தது' என கருதும் விஜய், அடுத்து எப்படி பிரசாரம் மேற்கொள்வது என்பது தொடர்பாக, கட்சியின் மேல் மட்டத் தலைவர்களான ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண் ராஜ் ஆகியோருடன் தொடர் ஆலோசனை நடத்தினார்.
'வழக்கம் போலவே சனிக்கிழமை பிரசாரத்தைத் தொடரலாம்' என மேல் மட்டத் தலைவர்கள் இருவரும் சொல்ல, அதை ஏற்காத விஜய், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி அமையும் என்பதைப் பொறுத்தே, அடுத்தகட்ட பிரசாரம் திட்டமிடப்பட வேண்டும். தீர்ப்பு வெளியானதும், அது குறித்து தீவிரமாக ஆலோசிப்போம். பின், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவெடுப்போம்.
'அதுவரை, எல்லா விஷயங்களு க்கும் இடைவெளி விடுவோம்' என்று சொல்லிவிட, இன்று வெளியாகும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திகிலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் த.வெ.க., தலைவர்கள்.
-நமது நிருபர்-