கரூர் சம்பவம் குறித்து தொடரும் சந்தேகம்: முதல்வருக்கு பா.ஜ. எழுப்பும் 12 கேள்விகள்
கரூர் சம்பவம் குறித்து தொடரும் சந்தேகம்: முதல்வருக்கு பா.ஜ. எழுப்பும் 12 கேள்விகள்
ADDED : அக் 02, 2025 07:22 AM

சென்னை: கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினிடம், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
பா.ஜ., - எம்.பி.,க்களை கொண்டு அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவுடன், கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடினோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலும் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க இயலவில்லை. முழுதுமாக கலந்துரையாடி, இந்த பிரச்னையை தெளிவாக புரிந்து கொண்ட பின், மனதில் எழுந்த கேள்விகளை, முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைக்க விரும்புகிறேன்.
* முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும், கரூர் பஸ் நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்?
* விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் வீடியோக்கள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும், சிலர் கூறினர். இவற்றை தாண்டி கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன?
* கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள், வேங்கைவயல் விவகாரம், மெரினா சாகச நிகழ்வில் கூட்ட நெரிசல் மரணங்கள், 25 'லாக் -அப்' மரணங்கள் போன்றவற்றுக்கு எல்லாம் செல்லாத முதல்வர் ஸ்டாலின், கரூரில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்துவது ஏன்?
* தி.மு.க.,வினரின் உணர்ச்சிப்பூர்வ நாடகத்தால், சந்தேகம் அடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவர். கூட்ட நெரிசலுக்கு பின், உண்மையை மறைக்க, தி.மு.க., அரசு இவ்வளவு அசாதாரண அவசரத்துடன் செயல்பட்டது ஏன்?
* இருபத்தி ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து, நான்கு பேரை கைது செய்து, மக்கள் மத்தியில் எழும் அனைத்து கேள்விகளையும், சந்தேகங்களையும் ஏன் இவ்வளவு விரைவாக தி.மு.க., அரசு முடக்குகிறது?
* பத்தாயிரம் பேர் தான் கூடுவர் என்று தவறாக கணித்ததாக, விஜய் மீது குற்றம் சாட்டும் தி.மு.க., அரசின் காவல் துறை, கூட்டத்தை சரியாக மதிப்பிடாதது ஏன்?
* விஜய் தாமதமாக வருவதால், சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று, அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை?
* கூட்டத்தை கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை மிக குறைவு என்பது உறுதி. உண்மையிலே எத்தனை பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்; பெரும் அரசியல் பேரணி நடக்கும் வேளையில் மாவட்ட எஸ்.பி., கரூரில் இல்லாதது ஏன்?
* இவ்வளவு குறைபாடுகள் அரசு தரப்பில் உள்ளன என்பது நிரூபணமான பின்பும், ஏன் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதில் ஏதேனும் உண்மைகள் புதைந்திருந்தால், அவை அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சமா?
* அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே, தி.மு.க.,வின் சட்டம் -ஒழுங்கு தோல்வியை மறைக்கும் விதமான கருத்துக்களை விசாரணை ஆணைய தலைவர் வெளியிடுவது ஏன்?
* விசாரணை நடக்கும் நிலையில், அதுகுறித்து பொது அறிக்கைகள் வெளியிட, வருவாய் துறை செயலருக்கு அதிகாரம் அளித்தது யார்; இது விசாரணையின் நடுநிலைத்தன்மையை சமரசம் செய்யாதா; திறமைமிக்க அரசு அதிகாரிகளை, தி.மு.க., வின் கைப்பாவைகளை போல் பயன்படுத்துவது சரியா?
* சிவகங்கை கோவில் காவலாளி அஜித்குமார் 'லாக்-அப்' கொலை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றிய தி.மு.க., அரசு, கரூர் வழக்கை ஒப் படைக்க தயங்குவது ஏன்?
தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வியால் நிகழ்ந்த பேரிடரே, இத்துயரம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக தெரிகிறது. எனவே தான், ஒரு நபர் ஆணையத்தின் மீது எந்த நம்பிக்கையும் இன்றி, சி.பி.ஐ., விசாரணை கோருகிறோம். கோரிக்கையை பரிசீலிப்பதோடு, தமிழக மக்கள் சார்பில் நான் முன்வைத்த கேள்விகளுக்கும் பதில் கூறுவீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.