ரயில்வே ஆபீஸ் வாயிலில் ஹிந்தி வார்த்தைகளின் தமிழ் எழுத்துக்கள்; கடும் எதிர்ப்புக்கு பின் நீக்கம்
ரயில்வே ஆபீஸ் வாயிலில் ஹிந்தி வார்த்தைகளின் தமிழ் எழுத்துக்கள்; கடும் எதிர்ப்புக்கு பின் நீக்கம்
ADDED : மார் 05, 2026 04:35 AM

திருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கு, புதிய நுழை வாயில் கட்டப்பட்டு உள்ளது.
இதன் முகப்பின் மேல் பகுதியில், 'கடமையின் நுழைவாயில்' என்று பொருள்படும்படி, 'கர்தவ்ய த்வார்' என்று தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது. இதற்கு, தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர்.
அதனால், நேற்று ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டில் எழுதப்பட்டு இருந்த ஹிந்தி எழுத்துக்களை, கருப்பு மையால் அழித்தனர்.
முன்னதாக, இந்த பிரச்னை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்டோர், மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டனர். கூடவே, 'ஹிந்தியில் இருக்கும் பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்' என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசையும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், இந்த பிரச்னையில் குரல் எழுப்பியதற்காக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தி.மு.க.,வை மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.
பிரச்னை தீவிரமாவதை உணர்ந்த திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும் ஹிந்தி எழுத்துக்கள் நீக்குவதாக அறிவித்தனர். அதன் அடிப்படையில், ஹிந்தி எழுத்துக்கள் நீக்கப்பட்டன.

