UPDATED : அக் 09, 2024 06:54 AM
ADDED : அக் 09, 2024 04:13 AM

தசரா யானைகள் ராஜ கம்பீரத்துடன் நடந்து செல்வதை பார்க்க, பரவசமாக இருக்கும். இந்த யானைகள் ஒரு காலத்தில் ரவுடிசம் செய்தன. விவசாயிகளின் தோட்டங்கள், வயல்களில் புகுந்து பயிர்களை பதம் பார்த்தன. மைசூரில் தசராவில் ஜம்பு சவாரி மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும். 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்தபடி, ஜம்பு சவாரியில் கம்பீரமாக நடை போடும் கேப்டன் யானையும், அதன் அக்கம், பக்கத்தில் மற்ற யானைகளும் நடந்து செல்வது கண் கவர் காட்சியாக இருக்கும். ஜம்பு சவாரியை பார்க்கவே, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருவது வழக்கம். வெடி சத்தம், பீரங்கி சத்தத்துக்கும் மிரளாமல், யானைகள் அமைதியாக செல்லும். இந்த யானைகள் ரவுடிகள் என, பெயர் பெற்றிருந்தன.
குடகின், காகனகோட்டே வனப்பகுதியில், 1968ல் பிடிக்கப்பட்ட யானைக்கு அர்ஜுனா என, பெயர் சூட்டப்பட்டது. அர்ஜுனா என்றால் கோபம்; கோபம் என்றால் அர்ஜுனா என, பெயர் பெற்றிருந்தது. இது காட்டில் இருந்த போது, மக்களுக்கு தொல்லை கொடுத்தது. வயல்கள், தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசமாக்கியது. சிறை பிடித்து பழக்கிய போதும், அர்ஜுனாவின் முன் கோபம் மாறவில்லை. 1996ல் மைசூரின் காரஞ்சி ஏரியில் தன்னை குளிப்பாட்ட அழைத்து சென்ற, தன் பாகனை தாக்கி கொன்றது. அர்ஜுனாவை கட்டுப்படுத்துவது எளிதான விஷயம் அல்ல. நாளடைவில் பழக்கி, சாந்தமான குணத்துக்கு கொண்டு வந்தனர். தசரா திருவிழாவிலும் பங்கேற்றது. 2012 முதல் 2019 வரை, தங்க அம்பாரியை சுமந்த பெருமை அர்ஜுனாவுக்கு உள்ளது. அதன்பின் வயது காரணமாக, ஓய்வு கொடுக்கப்பட்டது. தங்க அம்பாரி சுமக்கும் பொறுப்பை ஏற்றது. கடந்தாண்டு டிசம்பரில், காட்டு யானையை சிறை பிடிக்கும் போது, காயமடைந்த அர்ஜுனா உயிரிழந்தது. இது கர்நாடக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
கடந்த நான்கு ஆண்டுகளாக, தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு, 1970ல் குடகின் ஹெப்பாலா வனப்பகுதியில் பிடிக்கப்பட்டது. இதுவும் கூட கோபக்கார யானைதான். குளிப்பாட்ட, உணவளிக்க பாகன் மட்டுமே வர வேண்டும். வேறு யாராவது அருகில் வந்தால் சகிக்காது; கோபம் அடையும்.
அபிமன்யு எவ்வளவு கோபம் கொண்டதோ, அதே அளவுக்கு பயமும் அதிகம். பயம் வந்து விட்டால், திக்கு, திசை தெரியாமல் தலைதெறிக்க ஓடும். மக்களையும் அச்சுறுத்தும். நாளடைவில் பாகன்கள், உதவியாளர்களின் பயிற்சியால், பொறுமைசாலியாக மாறியது.
காட்டு வழியில் செல்லும் போது, எதிரே வரும் வாகனங்களை காட்டு யானைகள் வழி மறிப்பது, தும்பிக்கையால் தாக்குவது, மக்களை அச்சுறுத்துவதே ரவுடி யானைகளின் வழக்கம். கோபம் தலைக்கேறினால் மனிதர்களை கொல்லவும் தயங்காது.
குஷால் நகரின் சுக்ரீவா, ஹாசனின், யசளூரு வனப்பகுதியின் தனஞ்செய், கஞ்சன், காரேகொப்பா வனப்பகுதியின் கோபி யானைகள், பலரை கொன்று முகாமுக்கு வந்தவைதான். மக்களின் புகாரின் அடிப்படையில் யானைகளை பிடித்து, முகாமுக்கு அழைத்து வந்து பழக்கப்படுத்தப்பட்டன.
ரவுடி யானைகளின் பட்டியலில், பெண் யானைகளும் இருப்பது ஆச்சரியமான விஷய மாகும். பொதுவாக பெண் யானைகள், ஆண் யானைகள் போன்று முரட்டுத்தனமாக இருக்காது. ஆனால் காவேரி இதற்கு விதி விலக்காகும். சோம்வார்பேட் பகுதிகளில், கேழ்வரகு தோட்டத்தை நாசமாக்கியது; மனிதர்களையும் தாக்கியது. குட்டி ஈன்ற போது, மனிதர்களை விட்டு காவேரி ஒதுங்கி இருந்தது. குட்டிகள் பிளிறினாலோ, ஓடிவிட்டாலோ காவேரிக்கு கட்டுக்கு அடங்காத கோபம் வரும். கண்ணில் பட்டவர்களை மிதிக்கும். வனத்துறையினர் பிடித்து, பழக்கிய பின் தசரா திருவிழாவில் பங்கேற்கிறது.
தசரா திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் கோபியும் ஒன்று. இது மிகவும் மூர்க்கமான குணம் கொண்டது. 1993ல் காரெகொப்பா வனப்பகுதியில் பிடித்து, முகாமுக்கு அழைத்து வரும் போது, கண்ணில் பட்ட பொருட்களை தும்பிக்கையால் எடுத்து, மக்களின் மீது வீசியெறிந்தது. கோபியை சரியான பாதைக்கு கொண்டு வர, 18 பாகன்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஒரு காலத்தில் காட்டில் ரவுடியாக திரிந்த கோபி, இப்போது மைசூரு அரண்மனையின் பட்டத்து யானையாக உள்ளது. 13 ஆண்டுகளாக தசராவில் பங்கேற்கிறது. அர்ஜுனா, அபிமன்யு, கோபி மட்டுமின்றி, ஹர்ஷா, பிரசன்னா, சந்திரா, விக்ரம், இந்திரன் என, ரவுடி யானைகள் பட்டியல் நீளுகிறது.
- நமது நிருபர் -

