ADDED : பிப் 28, 2026 05:01 AM

மதுரை: மதுரையில் நாளை (மார்ச் 1) பிரதமர் மோடி பங்கேற்கும் தே.ஜ., கூட்டணியின் பொதுக் கூட்ட ஏற்பாடுகளை அ.தி.மு.க.,வினரே முழுமூச்சாக செய்து வருகின்றனர்.
மதுரையில் நாளை பிரதமர் மோடி தே.ஜ., கூட்டணியின் பிரசார பொதுக் கூட்டம், மத்திய அரசின் நகாய், ரயில்வே திட்டங்கள் துவக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக வரும் பிரதமர் திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
பிரதமரின் பொதுக் கூட்டம் ரிங்ரோடு அருகே மண்டேலா நகர் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக மேடை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இதில் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., அ.ம.மு.க., த.மா.கா., உட்பட பிறகட்சிகளும் பங்கேற்கின்றன. முதல்வர் வேட்பாளரான அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசுகிறார். இதையடுத்து தே.ஜ., கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமரே பங்கேற்பதால் பலலட்சம் பேரை திரட்டுவது முக்கியமாகிறது. அதற்கு அனுபவமிக்க அ.தி.மு.க.,வே சரியானதாக இருக்கும் என்று கூறி, அப்பொறுப்பை அ.தி.மு.க.,விடம் ஒப்படைத்துள்ளனர். அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் இதற்கான பொறுப்பேற்று நேற்று முதல் மேடை அமைக்கும் பணிகள், தொண்டர்களை திரட்டுதல், வரவேற்பு மற்றும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். நேற்று ராமநாதபுரம் உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து தன்னார்வலர்கள், தொண்டர் படையினர் என பலரையும் அழைத்து வந்து அவர்களே பயிற்சி அளித்தனர்.
பொதுக் கூட்ட திடல், ரோட்டோரங்களில் கூட்டணி கட்சிகளின் கொடிகளை கட்டினர். கூட்டம் திரட்ட உதயகுமாருக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளதால் அவர் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளிடம் தெரிவித்து வாகனம் உட்பட தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதனால் மைதானத்தில் பா.ஜ., நிர்வாகிகளைவிட அ.தி.மு.க., வினரே அதிகம் உலவுகின்றனர்.
ஏற்பாடுகளுக்கான செலவுகளை ஆரம்ப கட்டத்தில் பா.ஜ., வே செய்துள்ளது. தற்போது அதனையும் உதயகுமாரிடமே ஒப்படைத்து ஏற்பாடுகளை செய்யும்படி தெரிவித்துள்ளனர்.
கட்சியினர் சிலர் கூறுகையில், 'பா.ஜ., தான் இதற்கான செலவினங்களை செய்கிறது. என்றாலும் கூட்டம் திரட்டுவதற்கு அ.தி.மு.க.,வின் உதயகுமாரிடம் ஒப்படைத்தது போல, செலவுக்கான தொகையையும் வழங்கி இருப்பர். அவரே அனைத்தையும் முன்னின்று கவனிக்கிறார்,' என்றனர்.

