தி.மு.க., ஏமாற்றி விட்டதாக அருந்ததிய அமைப்பு கொந்தளிப்பு
தி.மு.க., ஏமாற்றி விட்டதாக அருந்ததிய அமைப்பு கொந்தளிப்பு
ADDED : ஆக 07, 2024 04:55 AM

சென்னை: ''அருந்ததியர் சமுதாயத்திற்கு 6 சதவீதம் உள் ஒதுக்கீடு தேவை,'' என, ஆதி தமிழர் முன்னேற்ற கழகத் தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.
அருந்ததியர் சமுதாய மக்கள் சார்பில், ஆதித் தமிழர் முன்னேற்ற கழகத் தலைவர் நாகராஜன், தமிழ்நாடு அருந்ததியர் சமுதாய மகா சபை தலைவர் உக்கடம் நாகேந்திரன், தேசிய ஒண்டிவீரன் பேரவை நிறுவனத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நேற்று பழனிசாமியை சந்தித்தனர்.
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு வழக்கில் சிறப்பு குழு அமைத்து, சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து, 10 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வெற்றி பெற வைத்ததற்காக, பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆதி தமிழர் முன்னேற்ற கழகத் தலைவர் நாகராஜன் கூறியதாவது: அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை பெற்று தந்து, இந்த சமுதாயத்திற்கு பாதுகாப்பு அளித்த பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தோம். தி.மு.க., ஆட்சியில் 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட சமுதாயமாக அருந்ததியர் சமுதாயம் இருந்தது.
ஆனால், தி.மு.க., ஆட்சியில் திட்டமிட்டு, 16 லட்சம் பேர் இருப்பதாகக் கூறி, 3 சதவீதம் உள் ஒதுக்கீடு என, எங்களை ஏமாற்றி விட்டார். அன்றிலிருந்து இதை எதிர்த்து வருகிறோம். எங்களுக்கு தேவை 6 சதவீதம் உள் ஒதுக்கீடு. அ.தி.மு.க., ஆட்சி அமையும்போது, எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என, பழனிசாமி தெரிவித்தார்.
தி.மு.க., அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், அவர்களுக்கு தோதான அமைப்பை அழைத்து, தனக்குத் தானே முதல்வர் பாராட்டை தேடிக் கொண்டார். அருந்ததியர் உள் ஒதுக்கீடு பெற்று தந்தது பழனிசாமி. அதில் ஸ்டாலின் 'ஸ்டிக்கர்' ஒட்டிக் கொள்ள பார்க்கிறார். உள் ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்துவதாக, தேர்தல் பிரசாரத்தின்போது, ஜெயலலிதாவும் கூறியிருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.