பழநியில் திருமாவளவன் காத்திருந்து விஸ்வரூப தரிசனம் செய்த பின்னணி! 'பவர்' கிடைக்கும் என வி.சி.க., தொண்டர்கள் நம்பிக்கை
பழநியில் திருமாவளவன் காத்திருந்து விஸ்வரூப தரிசனம் செய்த பின்னணி! 'பவர்' கிடைக்கும் என வி.சி.க., தொண்டர்கள் நம்பிக்கை
ADDED : நவ 23, 2024 05:37 AM

மதுரை; பழநி கோயிலில் நேற்றுமுன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விஸ்வரூப தரிசனம் செய்தார். அவருக்கு 'பவர்' கிடைக்கவே காத்திருந்து தரிசனம் செய்ததாகவும், நிச்சயம் 2026 சட்டசபை தேர்தலில் 'பவர்' கிடைக்கும் எனவும் அக்கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர்.
தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி.க., சமீபகாலமாக ஆட்சியில் பங்கு, திருமாவளவனுக்கு முதல்வராகும் தகுதி உண்டு எனக்கூறி வருகிறது. அதை திருமாவளவனும் ஆமோதித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நவ.,20ல் பழநிக்கு வந்தார். இரவு தங்கியவர் நேற்றுமுன்தினம் அதிகாலை விஸ்வரூப அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை தரிசித்தார்.
அப்போது அவருக்கு சிலையில் இருந்து வடியும் அபூர்வமான கவுபீகம் தீர்த்தம் வழங்கப்பட்டது. தரிசனம் செய்த திருப்தியுடன் மலைக்கு கீழே வந்தவர், 'பழநியாண்டவரை தரிசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இன்று முதல் புள்ளியை துவக்கியுள்ளோம்' என 'பொடி' வைத்து பேசினார்.
பழநி முருகனின் விஸ்வரூப தரிசனம் என்பது அதிகாலை நடை திறப்பதற்கு முன், அரைமணி நேரத்திற்கு முன்னதாக சுவாமி வெள்ளை நிற ஆடையுடன் மட்டுமே காட்சித்தருவார். இதை 'ஆண்டி கோலம்' என்பர். உள்ளூர் மக்கள் இதை 'விஸ்வரூப தரிசனம்' என்கிறார்கள். ஏனெனில் இந்த அலங்காரத்தில் முருகனை தரிசிக்கும்போது 'பவர்' கிடைக்கும் என நம்புகிறார்கள்.
முருகனை தரிசித்தவுடன் சிலையை வடிவமைத்த போகர் சித்தர் மற்றும் புலிப்பாணி ஆசிரமத்தில் தரிசனம் செய்தால் 'பவர்புல்' நபராக மாற அதிக வாய்ப்புள்ளதாக திருமாவளவனுக்கு நெருக்கமான சிலர் கூறியதை தொடர்ந்தே அவர் பழநிக்கு வந்துள்ளார்.
அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகளுக்கு தரும் முக்கியத்துவம் எங்களுக்கு தருவதில்லை. இன்னும் எங்களை 'இரண்டாம் இடத்தில்'தான் வைத்துள்ளனர். எங்களுக்கென்று ஓட்டு வங்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பெற்றோம்.
தி.மு.க., போட்டியிட்ட இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற எங்களது ஓட்டு வங்கியும் காரணம். கூட்டணி தர்மத்திற்காக பொறுமை காத்து வருகிறோம். திருமாவளவனும் 'முதல்வர் கனவு எனக்கும் உண்டு' என தெரிவித்துள்ளதால் 2026 சட்டசபை தேர்தலின்போது அப்போதைய சூழலை பொறுத்து பேச்சுவார்த்தை அமையும் என்றனர்.