திராவிட மாடல் அரசு; ஆன்மிக அரசு தான் முதல்வரின் மனம் குளிரவைத்த ஆதீனங்கள்
திராவிட மாடல் அரசு; ஆன்மிக அரசு தான் முதல்வரின் மனம் குளிரவைத்த ஆதீனங்கள்
ADDED : ஜூன் 28, 2025 02:54 AM

சென்னை : ''திராவிட மாடல் அரசு என்பதை விட, இது ஒரு ஆன்மிக அரசு,'' என, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் பள்ளி, சூளைமேடு, பாரத்வாஜேசுவரர் கோவில் அஞ்சுகம் துவக்கப் பள்ளி ஆகியவற்றுக்காக புதிய கட்டடங்களை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அந்நிகழ்வில், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது:
திராவிட மாடல் அரசு என்பதை விட இது ஒரு ஆன்மிக அரசு. காரணம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு அதிக திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல், ஆன்மிக விழாவில் தா, முதல்வர் அதிகம் கலந்து கொள்கிறார். அதனால் தான் இதை ஆன்மிக அரசு என்கிறேன்.
கல்விக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, மற்ற முதல்வர்களுக்கு முன்னுதாரணமாக நம் முதல்வர் செயல்படுகிறார். எனக்கு முன் இருந்த ஆதீனங்கள் காலத்தில் ஒரு சில கோவில்களுக்கு மட்டுமே குடமுழுக்கு செய்யப்பட்டன. காரணம், பணம் இல்லாததால் அல்ல; செய்வதற்குரிய அங்கீகாரம் வழங்குவதற்கு உரிய ஆட்சி அமையாததே காரணம்.
ஐந்து ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்து, துறை சார்பில் 26,000 கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. 'தேர்' நிகழ்ச்சிகளுக்கு கூட இந்த அரசு தான் அதிக அளவில் செய்து கொடுத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
குன்றக்குடி பொன்னம்பல தேசிக அடிகளார் பேசுகையில், ''ஆன்மிகப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் முதல்வரை பாராட்டுகிறோம். அரசும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் இரு கண்களைப் போல்; எனவே, அரசுப் பள்ளிகளுக்கு கிடைக்கும் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு சலுகை, அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவருக்கும் கிடைத்தால் மேலும் சாதனைகள் தொடரும். காரணம், அங்கும் ஏழை பிள்ளைகள் தான் படிக்கின்றனர்'' என்றார்.
மயிலம் பொன்னம்பலம் ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பேசுகையில், ''முருகன் என்றால் தமிழ் கடவுள் தான்; அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. கடந்த நான்கு ஆண்டுகளில் முருகனை போற்றும் வகையில், 3,000 கோவில்களில் குடமுழுக்கு தமிழக அரசு செய்திருக்கிறது,'' என்றார்.
இந்நிகழ்வில், ஸ்ரீபெரும்புத்துார், ஸ்ரீஎம்பார் ஜீயர் மடம் ஸ்ரீ அப்பன் உலகாரிய ராமானுஜ எம்பார் ஜீயர், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.