பிரதமர் மோடி அருகில் இருந்தவர் 'தி கிரேட் 10 தோல்வி பழனிசாமி': முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
பிரதமர் மோடி அருகில் இருந்தவர் 'தி கிரேட் 10 தோல்வி பழனிசாமி': முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
ADDED : ஜன 26, 2026 05:31 AM

காஞ்சிபுரம்: ''மதுராந்தகத்தில் பிரத மர் மோடி அருகில் அமர்ந் திருந்தவர், 'தி கிரேட் 10 தோல்வி பழனிசாமி,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, முதல் வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில், தி.மு.க., மாணவர் அணி சார்பில், நேற்று நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க, ஒரு கும்பல் துடிக்கிறது. சென்னை வந்த மத்திய அமைச்சர் தர் மேந்திர பிரதான், நமக்கு மொழிப்பாடம் எடுத்தது, எல்.கே.ஜி., மாணவன், பேராசிரியர்களுக்கு பாடம் எடுப்பதுபோல் இருந்தது.
வீழ்த்த முடியாது
தமிழகத்தை அடிமைப்படுத்த, டில்லியில் இருந்து காலந்தோறும் படையெடுக்கின்றனர். எத்தனை முறை படையெடுத்தாலும், தமிழகத்தை வீழ்த்த முடியாது. கடந்த 2021 தேர்தல் தோல்வியில், எந்த பாடமும் கற்றுக் கொள்ளாமல், மீண்டும் அ.தி.மு.க., தோளில் அமர்ந்து, பா.ஜ., வருகிறது.
தேர்தல் சீசனில், தமிழகம் வரும் பிரதமர் மோடி, பல 'வெரைட்டி'யில் வடை சுடுவது வழக்கம். இந்த முறையும் மதுராந்தகம் வந்து, வழக்கமான பழைய வடைகளை சுட்டுச் சென்றார். அந்த மாவும் புளித்து போனது, அதை கேட்ட தமிழக மக்களின் காதும் புளித்து போய்விட்டது.
பிரதமர் மோடிக்கு ஒன்றை சொல்கிறேன். உங்கள் அருகில் அமர்ந்திருந்தவர், சாதாரண பழனிசாமி கிடையாது. 'தி கிரேட் 10 தோல்வி பழனிசாமி!' கடந்த 2019 முதல் எல்லா தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளார்.
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியை வளர்க்கப் போவதாக, பிரதமரால் எப்படி சிரிக்காமல் சொல்ல முடிகிறது? நாடும், நாட்டு மக்களும் அமைதியாக வாழும் நிலை சிலருக்கு பிடிக்கவில்லை. பிரதமரே இந்த நோக்கம் கொண்டவராக இருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
பேசுவது நியாயமா?
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாக, பொத்தாம் பொதுவாக பிரதமர் மோடி பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
நாடு முழுதும், கடந்த ஐந்தாண்டுகளில், துறைமுகங்கள் வழியே, 11,311 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை, குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் சிக்கி உள்ளன. அந்த மாநிலங்களில், தி.மு.க., ஆட்சியா நடக்கிறது? 'டபுள் இன்ஜின்' என நீங்கள் சொல்லும், 'டப்பா இன்ஜின்' தானே ஓடுகிறது.
இந்தியாவுக்குள் போதைப்பொருள் நுழைவதை தடுக்க வேண்டியது, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தான். இந்த ஸ்டாலின் கிடையாது. மஹாராஷ்டிராவில் பேச வேண்டியதை, மதுராந்தகத்தில் பேசுவது நியாயமா? தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என, கவர்னர் போலவே பிரதமரும் பேசுவது கண்டனத்திற்குரியது.
மோடி இந்த மண்ணில் கால் வைத்ததும், உதய சூரியன் மறைந்து விட்டதாக பழனிசாமி சொல்கிறார். வாழ்க்கை முழுதும் கால்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், சூரியன் எப்படி தெரியும். ஒரு முறையாவது, கொஞ்சம் தலை நிமிர்ந்து பாருங்கள். அப்போது தான், சூரியனின் இருப்பும், வலிமையும் உங்களுக்கு தெரியும். டில்லி ஆதிக்கத்துக்கு தமிழகம் என்றும் தலைகுனியாது. இவ்வாறு அவர் பேசினார்.

