எழுத்தாளர் வட்டத்திலும் கலகத்தை மூட்டிய கரூர் துயர சம்பவம்
எழுத்தாளர் வட்டத்திலும் கலகத்தை மூட்டிய கரூர் துயர சம்பவம்
ADDED : அக் 09, 2025 01:24 AM

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இரு பிரிவாக பிரிந்து வெளியிட்ட கூட்டறிக்கை, அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் த.வெ.க., தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். 'இதற்கு த.வெ.க.,வினரே காரணம்' என தி.மு.க., தரப்பும், 'காவல் துறையே காரணம்' என த.வெ.க., தரப்பும் குற்றஞ்சாட்டு கின்றன.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி முன்னாள் நீதிபதி சந்துரு, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பாலகிருஷ்ணன், தேவசகாயம், எம்.பி.,க்கள் ரவிகுமார், சல்மா, எழுத்தாளர்கள் வண்ணதாசன், பொன்னீலன், பெருமாள் முருகன் உள்ளிட்ட 200க்கும் அதிகமானோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அதில், 'விஜய், கட்சியினரை சந்திக்க தேர்வு செய்த முறை, அரசியல் முதிர்ச்சி, பொது வாழ்க்கை, தனிமனித கண்ணியத்திற்கு உகந்ததல்ல. இதுவே பேரழிவுக்கு இட்டுச் சென்றது. அரசு மீது பழிசுமத்தி விட்டு தப்பிக்கும் உள்நோக்கம் தெரிகிறது.
' குற்றத்திலிருந்து தப்பிக்க, இதுவரை கொள்கை எதிரி என கூறி வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் விஜய் தயாராகி விட்டார். விஜய் உள்ளிட்ட அனைவரையும், சட்டத்தின் முன்நிறுத்த, தமிழக அரசு தயங்கக்கூடாது' என கூறப்பட்டிருந்தது.
அதற்குப் பதிலடியாக, 'படைப்பாளர்கள் சங்கமம்' அமைப்பு சார்பில், எழுத்தாளர்கள் திராவிட மாயை சுப்பு, இசைக்கவி ரமணன், கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், பேராசிரியர் கனகசபாபதி, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கவிஞர்கள் லட்சுமி மணிவண்ணன், ரவி சுப்பிரமணியன், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி உள்ளிட்ட 200க்கும் அதிகமானோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அதில், 'தி.மு.க., அரசின் தவறுகள் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் கையொப்பமிட்டுள்ள அனைவருமே தி.மு.க., கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள். தாங்களே ஒட்டுமொத்த தமிழக எழுத்தாளர்களின் பிரதிநிதிகள் போன்ற தோற்றத்தை உருவாக்கும் தாதா மனப்பான்மையை ஏற்க முடியாது' என கூறப்பட்டது.
இதனால், இரு தரப்பாக எழுத்தாளர்கள் பிரிந்து, சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக, தன் இணையதள பக்கத்தில் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன், 'கூட்டாக எழுத்தாளர்கள் அறிக்கை விடுவது, எழுத்தாளர் என்ற அடையாளத்திற்கு எதிரான செயல். அரசின் சலுகைகளுக்காக, கூட்டறிக்கைகளில் எழுத்தாளர்கள் கையெழுத்திடு கின்றனர்.
'பா.ஜ.,வும் ஒரு எழுத்தாளர் அணியை திரட்டி இருக்கிறது. ஆனால், பா.ஜ.,வின் மனநிலை, அள்ளி கொடுப்பது அல்ல; கிள்ளி கொடுப்பது. முழு நேரமும் பா.ஜ.,வுக்கு குரல் கொடுத்து வரும் மாலன் முதல் அரவிந்தன் நீலகண்டன் வரையிலானவர்களுக்கு, பா.ஜ., எதையுமே கொடுக்கவில்லை' என, கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு எழுத்தாளர்கள் மாலன், அரவிந்தன் நீலகண்டன் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாலன் வெளியிட்ட பதிவில், 'நான் எந்த பலனையும் எதிர்பார்த்து, எவரையும் ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ இல்லை. பிரச்னைகளின் அடிப்படையில் மட்டுமே கருத்து தெரிவிக்கிறேன்.
'எனக்கு எழுத்து என்பது சமூகக் கடமை; அது வணிகமல்ல. எல்லாவற்றிலும் லாபம் பார்க்க விரும்பும் வணிகர்களால் இதை புரிந்து கொள்ள முடியாது' என, காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்குள் மோதலை ஏற்படுத்திய கரூர் சம்பவம், எழுத்தாளர்கள் இடையிலும் மோதலை ஏற்படுத்தி உள்ளது.