UPDATED : ஜன 10, 2024 04:16 AM
ADDED : ஜன 09, 2024 10:26 PM

எஸ்.டி.பி.ஐ., என்ற இந்திய சமூக ஜனநாயக கட்சி 'மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு' என்ற பெயரில் மதுரையில் பேரணி நடத்தியது. 100 ஏக்கரில் அமைந்த திடலில், 48 ஏக்கரில் மாநாட்டுகான மேடை, இருக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செயதிருந்தனர்.
வாகனங்கள் நிறுத்த 20 ஏக்கர் ஒதுக்கி இருந்தனர். தொண்டர்கள் அமர 50,000 நாற்காலிகள் போடப்பட்டன. மொத்த இடமும் நிரம்பி, மாநாட்டு பந்தலுக்கு வெளியிலும் திரளாக கூடியிருந்தனர்.
பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் காணப்பட்டனர். தி.மு.க., கரை வேட்டி கட்டிய பலரையும் கூட பார்க்க முடிந்தது.
மாநாட்டு பந்தலுக்கு வெளியே பல வகை உணவுகள் அடங்கிய ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. தகவல் பரவி உள்ளூர்வாசிகள் பலரும் திரளாக வந்து ருசித்தனர்.
இந்த அளவுக்கு பெரும் கூட்டம் திரளும் என்று உண்மையில் நாங்களே எதிர்பார்க்கவில்லை என கட்சி நிர்வாகி ஒருவர் பெருமையாக சொன்னார்.
மேடையில் பேசியவர்கள் அனைவருமே தி.மு.க., மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
'நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டதால் தான் தேர்தலில் அவருக்கு கணிசமான முஸ்லிம் ஓட்டுகள் விழுந்தன.
ஆனால், குறைந்தபட்சமாக அந்த வாக்குறுதியைக்கூட அவர் நிறைவேற்றவில்லை' என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'தி.மு.க.,வை போல நாங்கள் வாக்கு கொடுத்து விட்டு ஏமாற்ற மாட்டோம். முஸ்லிம்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்' என பல முறை சொல்லி, கூட்டத்தினரை கைதட்ட வைத்தார்.
இரண்டரை ஆண்டு களில் முஸ்லிம்களுக்கு தி.மு.க மீது இருந்த நம்பிக்கை தகர்ந்து விட்டதை கைதட்டல் காட்டுவதாக கட்சியினர் கூறுகின்றனர்.
இதை உணர்ந்துதான் 'பா.ஜ.,வுடன் உறவை முறித்துக் கொண்டால் முஸ்லிம்கள் வாக்குகளை அ.தி.மு.க., பக்கம் திருப்பலாம்' என பழனிசாமி கணக்கு போட்டிருக்க வேண்டும்.
கட்சியின் சில மூத்த தலைவர்களின் எச்சரிக்கையை புறக்கணித்து பா.ஜ., உறவை அவர் துண்டித்தார்.
அவர் போட்ட கணக்கு தப்பவில்லை என்பதை இந்த மதுரை இந்த மாநாடு உறுதி செய்கிறது. கணிசமான முஸ்லிம் ஓட்டு குறையும் என்பதோடு, வேறு வகையிலும் தி.மு.க.,வுக்கு இந்த மாநாடு நெருக்கடி ஏற்படுத்தும் என எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிகள் கூறுகின்றனர்.
''தி.மு.க., அணியில் உள்ள ஏனைய முஸ்லிம் அமைப்புகள் இந்த மாநாட்டின் வெற்றியை சுட்டிக் காட்டி அடுத்து வரும் தேர்தல்களில் அறிவாலயத்துடன் பேரம் பேச வாய்ப்பு இருக்கிறது.
''அதன் எதிரொலியாகவே, சிறுபான்மையினர் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் அவசரமாக வெளியிட துவங்கியுள்ளார்” என்றார் ஒரு நிர்வாகி.
- நமது நிருபர் -

