காங்கிரஸ் வேட்பாளர் எண்ணிக்கை 300 மட்டுமே! வரலாற்றிலேயே இப்போது தான் 'கம்மி'
காங்கிரஸ் வேட்பாளர் எண்ணிக்கை 300 மட்டுமே! வரலாற்றிலேயே இப்போது தான் 'கம்மி'
ADDED : ஏப் 16, 2024 12:20 AM

'இண்டியா' கூட்டணியை அமைத்ததன் காரணமாக, தங்கள் கட்சியின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, இந்த லோக்சபா தேர்தலில் தான், மிகவும் குறைவான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நெருக்கடி காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை, 300க்குள் சுருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழு கட்டங்களாக நடக்கும் லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட ஓட்டுப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில், அடுத்தடுத்த கட்டங்களுக்கான தேர்தல் பணிகள் அந்தந்த மாநிலங்களில் தீவிரம் பெற்றுள்ளன.
தீவிரமான தேர்தல் பிரசாரம், கடைசி நேர பேரம், கட்சி தாவல், கூட்டணி முறிவு, வேட்பாளர் மாற்றம், வேட்பாளர் அறிவிப்பு என, பல பணிகள் ஜோராக அரங்கேறி வருகின்றன. தேசிய கட்சிகளான பா.ஜ.,வும், காங்கிரசும், தங்களின் கட்சித் தலைமை அலுவலகத்தில் தினமும் பல்வேறு மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை படிப்படியாக அறிவித்து வருகின்றன.
இதன்படி, காங்கிரஸ் சார்பில் இதுவரையில், 27 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களின் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கபட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், 278 பேர் மட்டுமே இதுவரை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
ஆராய்ச்சி
காங்கிரஸ் சார்பில் இன்னும் ஒரு வேட்பாளர் கூட அறிவிக்கப்படாத மாநிலம் எதுவெனில் ஹரியானா மட்டுமே. இது தவிர பீஹார், பஞ்சாப், ஆந்திரா, ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களிலும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. உ.பி.,யில் நட்சத்திர தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலி என இரு தொகுதிகளுக்கும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளுக்கு இன்னும் பெயர்கள் வெளியாகவில்லை. இப்படியாக, தாங்கள் போட்டியிட திட்டமிட்டு, அதேசமயம் வேட்பாளர்களை அறிவிக்காமல் இன்னமும் பெயர்களை அக்கட்சி தலைமை ஆய்வு செய்து வருகிறது.
அவ்வாறு ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை, 20க்கும் குறைவானதாகவே உள்ளன. இந்த கணக்கின்படி, ஏற்கனவே 278 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 20 இடங்களுக்கான வேட்பாளர்களும் வரப்போகும் நாட்களில் அறிவிக்கப்பட்டு விடுவர். இதன்படி, ஒட்டுமொத்தமாக பார்த்தாலும், காங்., போட்டியிடும் தொகுதி களின் எண்ணிக்கை, 300யை கூட நிச்சயம் தாண்டாது என்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2019ல், 421 தொகுதிகளிலும்; 2014ல், 464 தொகுதிகளிலும்; 2009ல், 440 தொகுதிகளிலும்; 2004ல், 417 தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களை காங்கிரஸ் களம் இறக்கி இருந்தது.
ஆனால், இந்த தேர்தலில் 300 பேர் கூட காங்கிரஸ் வேட்பாளர்களாக களமிறங்கவில்லை என்பது, அக்கட்சியின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. ஐ.மு., கூட்டணியாக இருந்து போட்டியிட்டபோதுகூட இவ்வளவு குறைவான தொகுதிகளில் போட்டியிடவில்லை. இந்த குறைவுக்கு காரணம், இண்டியா கூட்டணி தான். முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அந்த கட்சிகளுக்கு அவர்களது சொந்த மாநிலங்களில் நிறைய தொகுதிகளை காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது.
சூழ்நிலை
குஜராத் மற்றும் ஹரியானா, டில்லி போன்ற செல்வாக்கு மிக்க மாநிலங்களில்கூட, இம்முறை ஆம் ஆத்மிக்கு தொகுதிகளை விட்டுக் கொடுத்து உள்ளது காங்கிரஸ். சிவசேனா உத்தவ் பிரிவு மற்றும் இடதுசாரிகள் போன்ற கட்சிகளுடன், முதன்முறையாக லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்து, அவர்களுடன் தொகுதிகளை பங்கிடவும் நேர்ந்துள்ளது.
இண்டியா கூட்டணி தர்மத்திற்காக தங்களது மிகப்பெரும் பலம் வாய்ந்த மத்திய பிரதேச மாநிலத்திலும், சமாஜ்வாதி கட்சிக்கு இம்முறை தொகுதி ஒதுக்க நேர்ந்துவிட்டது. பெரிய மாநிலங்களான மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தமிழகம், பீஹார் போன்றவற்றிலும் கூட்டணி கட்சிகளிடமிருந்து, சொற்ப தொகுதிகளையே பெற முடிந்தது.
இதனால் தான், காங்கிரஸ் தன் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, 300 தொகுதிகளுக்கும் கீழ் போட்டியிடும் சூழ்நிலை இந்த தேர்தலில் உருவாகிஉள்ளது. லோக்சபாவில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், ஒரு தேசிய கட்சி 300 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது என்பது ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது டில்லி நிருபர் -

