வண்ண தோரணம், கோலங்களுடன் பிரதமரை வரவேற்க தயாரான கிராமம்
வண்ண தோரணம், கோலங்களுடன் பிரதமரை வரவேற்க தயாரான கிராமம்
UPDATED : பிப் 26, 2024 07:30 AM
ADDED : பிப் 26, 2024 03:26 AM

பல்லடம் : பல்லடம் வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, கிராம மக்கள், வீதி முழுக்க வண்ண பலுான் தோரணங்கள் கட்டி, கோலங்கள் வரைந்து, பிரதமர் படத்தை ஊர்வலமாக எடுத்து வந்து ஆரத்திஎடுத்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, மாதப்பூரில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின், 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பொதுக்கூட்டம் நாளை நடக்கின்றன.
இதில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மாதப்பூர் கிராம மக்கள், வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர். வீதிகளில், 300க்கும் மேற்பட்ட கோலங்கள் வரையப்பட்டன; வீதிகள் முழுக்க ஆரஞ்சு நிற பலுான்களால் அலங்கரிக்கப்பட்டன.
ஒரு சிறுமி பிரதமரின் உருவப்படத்தை கையில் ஏந்தி வர, மேளதாளத்துடன் பா.ஜ.,வினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
வழிநெடுக, பல தரப்பினரும் பிரதமரின் படத்துக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 'வருக... வருக... பிரதமர் அவர்களே, எங்கள் கிராமம்; எங்கள் பிரதமர், உங்கள் பாதம் படுவது எங்கள் மண்ணின் புண்ணியம்' போன்ற வாசகங்களை கோலமாகவும், பிளக்ஸ் பேனரிலும் எழுதி வைத்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்களுடன் பா.ஜ.,வினரும் பங்கேற்றனர்.

