கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு; மீண்டும் சொல்கிறார் திருமாவளவன்
கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு; மீண்டும் சொல்கிறார் திருமாவளவன்
ADDED : ஜூன் 09, 2025 04:44 AM

காரைக்குடி: “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்பட வேண்டும். இதுதான் இன்றைக்கும் எங்கள் நிலைப்பாடு,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தி.மு.க.,விற்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவாகவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடிக்கடி தமிழகம் வந்து கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார்.
கூடுதல் சீட்
தற்போது அ.தி.மு.க., மட்டுமே பா.ஜ., கூட்டணியில் உள்ளது. மற்ற கட்சிகள் யாரும் கூட்டணிக்கு வர, இதுவரை சம்மதிக்கவில்லை. இன்றளவில் தி.மு.க., கூட்டணி தான், தமிழகத்தில் வலுவாக உள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, கூட்டணியில் கூடுதல் சீட் கேட்கிறோம். கூட்டணி பேச்சு முடிவின்படி, அவ்வப்போது எடுக்கப்படும் முடிவுகளை ஏற்கிறோம்.
தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக, அ.தி.மு.க., கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால், அக்கட்சியினருக்கு வருத்தம் உள்ளது.
அதையடுத்து, அக்கட்சி அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்லுமா என்பது தெரியவில்லை. அக்கட்சி தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். இதற்காக, அக்கட்சி தி.மு.க., கூட்டணிக்கு வரும் என சொல்ல முடியாது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்பட வேண்டும். இதுதான் இன்றைக்கும் எங்கள் நிலைப்பாடு. போக்குவரத்துக் கழகங்களின் பெயரில் இருந்து, 'தமிழ்நாடு' என்பதை எடுத்ததில், எந்த உள்நோக்கமும் இல்லை.
உட்கட்சி விவகாரம்
பா.ம.க.,வில் நடப்பது குடும்ப, உட்கட்சி விவகாரம். இதில் மற்றவர்கள் தலையிடுவது தேவையில்லாதது; கவலையளிக்கிறது.
வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், பஹல்காம் சம்பவத்தில் ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதல் குறித்து எல்லா கட்சியினரும் பேசுவர். மத்திய அரசு அதற்கு உரிய பதிலளிக்க வேண்டும்.
இந்தியாவிற்கு என தனியாக தேசிய மொழி இல்லை. இருப்பினும் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இருக்கிறோம். இதற்கு, நம் அரசியலமைப்பு சட்டமே காரணம்.
பா.ஜ., அரசியல் அமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும். மணிப்பூரில் நடக்கும் வன்முறை, அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு பா.ஜ., தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்