திருமூலநாதர் கோவிலின் ரூ.100 கோடி நிலம் கபளீகரம்! விவசாய குத்தகைக்கு எடுத்து மனையாக மாற்றம்
திருமூலநாதர் கோவிலின் ரூ.100 கோடி நிலம் கபளீகரம்! விவசாய குத்தகைக்கு எடுத்து மனையாக மாற்றம்
UPDATED : மார் 12, 2026 06:04 AM
ADDED : மார் 12, 2026 05:23 AM

- நமது நிருபர் -
பிரசித்தி பெற்ற புழல் திருமூலநாதர் கோவிலுக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான 4 ஏக்கர் இடம், மனைப் பிரிவுகளாக மாற்றப்பட்டு, கபளீகரம் செய்யப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்து, இடத்தை மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை புழலில் உள்ளது, 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமூல நாதர் கோவில். இந்த கோவிலுக்கு, மாதவரம் வட்டம், புழல் கிராமத்தில் 4 ஏக்கர், 20 சென்ட் நிலம் இடம் உள்ளது.
இந்த இடத்தை, 1942ம் ஆண்டு சொக்கலிங்க முதலியார் என்பவர், கோவிலுக்கு தானமாக வழங்கி பத்திரம் எழுதி வைத்துள்ளார். பின்னர் அந்த இடம் விவசாயம் செய்வதற்காக வேதகிரி, ஏழுமலை ஆகிய விவசாயிகளுக்கு, கோவில் நிர்வாகம் குத்தகைக்கு அளித்தது.
கடந்த 1984ம் ஆண்டு விவசாய நில கணக்கெடுப்பின்போது, குறிப்பிட்ட நிலம் வேதகிரி, ஏழுமலை ஆகிய இருவரின் பெயருக்கு மாறியது; அடங்கல் கணக்கிலும் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றன. அதன்பின், விவசாயம் செய்வது கைவிடப்பட்டு தரிசு நிலமானது.
இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான அந்த இடம் பலருக்கு கை மாறி, தற்போது மனைப்பிரிவாகி வீடுகள், கடைகள் என கபளீகரம் செய்யப்பட்டு விட்டன. இவற்றின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய்.
கடந்த 1996ம் ஆண்டு கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த தினகரன், கோவிலுக்கு சொந்தமான இடங்களின் சர்வே எண்ணை குறிப்பிட்டு, சிட்டா அடங்கல் மற்றும் வரைபடம் வேண்டி, கிராம நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதன்பின், கோவில் இடம் கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் ஆகிவிட்டது. தற்போது, இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது தான் என்பதுகூட, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியாத அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.
இந்த இடத்தின் முறையான ஆவணங்களை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தால், உண்மை நிலவரம் தெரிய வரும் என்கின்றனர் பக்தர்கள்.

இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: திருமூலநாதர் கோவில் நிர்வாக அதிகாரியே, பாடி திருவலீஸ்வரர் சிவன் கோவில் நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். திருமூலநாதர் கோவிலுக்கு தனி அதிகாரியை நியமித்து, கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலுக்கு சொந்தமான 240 ஏக்கர் நிலத்தை, அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். அதுபோல், திருமூலநாதர் கோவில் நிலத்தையும் மீட்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

