வெள்ளத்தில் சென்னை மக்கள் சிக்கி தவிப்பதை தடுக்க புதிய திட்டம்! ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு கலன்கள்
வெள்ளத்தில் சென்னை மக்கள் சிக்கி தவிப்பதை தடுக்க புதிய திட்டம்! ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு கலன்கள்
UPDATED : ஏப் 23, 2025 04:15 AM
ADDED : ஏப் 23, 2025 12:02 AM

மழைக்காலங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கித்திணறுவதை தடுக்கும் வகையில், ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள், விளையாட்டு திடல்களில், மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்கும் புதிய திட்டத்தை, சென்னை மாநகராட்சி துவக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியில், வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. குறிப்பாக, கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வலுப்படுத்தப்படுகிறது.
வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில், மழைநீர் சேகரிப்புக்காக குளம் வெட்டப்பட்டது. இதன் பயனாக, கடந்தாண்டு பெய்த மழையால், அப்பகுதி வெள்ளத்தில் பாதிக்கப்படவில்லை. இவற்றை பின்பற்றி, அனைத்து பகுதிகளிலும், காலி இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில், அமைக்கப்பட்டு வருகிறது. இந்திரா காலனி மைதானம், மாதிரி பள்ளி மைதானம், ஆர்.ஏ.புரம் செயின்ட் மேரிஸ் விளையாட்டு மைதானம், தி.நகர் ஸ்ரீ வெங்கட்நாராயணா மைதானம், டிரஸ்ட்புரம் மைதானம், கிரசண்ட் பள்ளி மைதானம், மேயர் ராமநாதன் சாலை ஆகிய ஏழு விளையாட்டு திடல்களில் அமைக்கப்படுகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிதியுதவியின் கீழ், ஜெர்மன் தொழில்நுட்பத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு விளையாட்டு திடல்களிலும் தலா, 1.6 கோடி ரூபாய் மதிப்பில், தலா 5 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்கும் வகையில் கட்டமைப்பு அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டமைப்பும், 25 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. இதில், 2 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டு மூடப்படுகிறது. விளையாட்டு மைதானத்தில் பெய்யும் மழைநீர், இக்கட்டமைப்பு பகுதியில் வந்து சேரும் வகையில், வடிவமைக்கப்படுகிறது.
அதேபோல், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 770 பூங்காக்களில், 3,000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில், நிலத்தடி மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டமைப்பு பணி நடந்து வருகிறது. இதில் 250 பூங்காக்களில் இப்பணிகள் முடிந்துள்ளன.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பூங்கா, விளையாட்டு மைதானத்தில், பல இடங்களில் அமைக்கப்படும், 'கேட்ச் பிட்' எனும் மழைநீர் உள்வாங்கியில் வடியும் தண்ணீர், குழாய் வாயிலாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு எடுத்து செல்லப்படும்.
இதன் வாயிலாக, விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும். மேலும், நீர்நிலைகளில் நீர் உள்வாங்காமல், மழைநீர் வடிகால்களில் கொள்ளளவை மீறி செல்லும்போது, இதுபோன்ற விளையாட்டு திடல்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு திருப்பி விடப்படும்.
![]() |
இதன் வாயிலாக, குடியிருப்புகளில் பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பையும் தடுக்க முடியும். இந்த கட்டமைப்பு, 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு நீரை சேகரித்து வைக்கும். இவற்றால் நீலத்தடி நீர் உயர்வதுடன், அருகாமை குடியிருப்புகளில் கோடை காலங்களிலும் நிலத்தடி நீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க முடியும்.
மேலும், மேற்பரப்பு வழக்கம்போல் விளையாட்டு மைதானமாகவே பயன்படுத்த முடியும். குறிப்பாக, 60 டன் எடையை தாங்கும் வகையில் மேற்பரப்பு வடிவமைக்கப்படும். இந்த கட்டமைப்பு, 50 ஆண்டுகளுக்கு மேல் தாங்கும் என்பதால், சென்னை மக்களுக்கு வெள்ள பாதிப்பை தடுப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -