இன்றைய அ.தி.மு.க., அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாறி வருகிறது: காங்., - எம்.பி.,
இன்றைய அ.தி.மு.க., அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாறி வருகிறது: காங்., - எம்.பி.,
ADDED : மார் 30, 2025 04:24 AM

திருநகர்: ''சமீப காலமாக அ.தி.மு.க., அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாறி வருகிறது. விரைவில் பா.ஜ., உடன் அ.தி.மு.க., இணைப்பு விழா நடக்கும்'' என விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பார்லிமென்ட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இதுவரை துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவில்லை. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், நான்கு முறை பேச வாய்ப்பு கேட்டும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
பா.ஜ., தலைவர் அண்ணாமலை, '100 நாட்கள் வேலை திட்டத்தில் முறைகேடு' என்கிறார். அத்திட்ட பயனாளர்களை நேரில் சந்தித்தால்தான், அவர்களது நிலை அண்ணாமலைக்கு புரியும்.
இத்திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு நான்கு மாதங்களாக மத்திய அரசு சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து அண்ணாமலை பேசாதது ஏன்?
தமிழகத்திற்கு பா.ஜ., அரசு செய்யும் துரோகங்கள் அ.தி.மு.க., தலையில்தான் விழும். மக்கள் அ.தி.மு.க.,வைதான் தண்டிக்கப் போகின்றனர்.
ராமேஸ்வரம் விமான நிலையம் அறிவிப்போடு நின்று விடக்கூடாது. அதற்கான பணிகள் விரைவில் துவக்கப்பட வேண்டும்.
சமீப காலமாக அ.தி.மு.க., அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாறி வருகிறது. விரைவில், பா.ஜ., உடன் அ.தி.மு.க., இணைப்பு விழா நடக்கும். த.வெ.க., விரைவாக வளர்ந்து வருகிறது.
அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வந்தவர்களும் இனி அக்கட்சிக்கு ஓட்டளிக்காமல் வேறு பக்கம் நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., கடைசி காலத்தை நெருங்கி வருகிறது.
எம்.ஜி.ஆர்., வளர்த்தெடுத்த கட்சி, அமித் ஷாவால் அழிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.